Monday, October 4, 2010

ஆக்ரமிப்பு

பிடிவாதமாய் எல்லாக் கதவுகளையும் சார்த்திவிட்டேன்.

முட்டி மோதி, வெறி கொண்டு
பாடல்களாய்
கதவிடுக்களின் வழி
உள் நுழைந்து விட்டன
பிம்பக்குவியல்கள்

கற்பனைக்குமெட்டா
செளந்தர்ய
பெண் ரூபப் பிம்பங்கள்
இசைக்கேற்ப
ஏதேதோ உடலசைவுகளில்
ஏதேதோ தாபத்தின் சைகைகள் காட்டி
நினைவெங்கும் படர்கின்றன

உன் முத்தத்தின் சிறு சப்தமும்
உன் இன்பத்தின் சிறு முனகலும்
எங்கே எங்கேயெனத்
தேடித் தவிக்கிறேன்
இந்நாளின்
பிம்பப்பெருக்குள்

கருணை கூர்ந்து
மீண்டும்
கதவை மூடு
இறுக்கி மூடு
நம் அந்தரங்க வெளியின்

பவித்திரம்
காக்க

No comments: