Wednesday, October 20, 2010

குழவி சேரவில்லை இன்னும்

பின்கட்டு முற்றத்தில்
அம்மாக்காரியின் கால்களில்
குப்புறப்படுத்து
பொக்கைவாய் காட்டி
கண்கள் மூடி
வெந்நீர் ஊற்றும்போதெல்லாம்
சிரித்து சிரித்து
குளிக்கிறது
குழந்தை

நடுக்கட்டில்
படங்களாய்
தொங்குகின்றனர்
முன்னோரும்
தெய்வங்களும்
பிரார்த்தனைகள்
நடுவே

முன்கட்டில்
‘சிரிப்பாணியைப்
பார் அதுக்கு
குழவி கூட
இன்னும் சேரவில்லை’
முனகுகிறாள் ஆச்சி
கட்டிலுக்கு அடியில்
கட்டிய பையில்
மூத்திரம் பெய்தபடியே

எல்லா கட்டுகளின்
எல்லா சப்தங்களையும்
வேறுபாடின்றி
அணைத்து
பெருவெளியில்
கலப்பதாய்
பாவனை கொள்கிறது
சாம்பிராணிப்
புகை

No comments: