Monday, October 31, 2011

பாரீசிலிருந்து சாரு நிவேதிதாவிற்கு






சாரு நிவேதிதா
அன்பு நண்பர் சாரு நிவேதிதாவிற்கு,

இரண்டு நாள் பயணமாக பாரீசுக்கு வந்தேன். நாளை இரவு மீண்டும் சென்னையில் இருப்பேன். கருத்தரங்க தேநீர் இடைவேளையில் உங்கள் blog-இல் நீங்கள் எனக்கு எழுதிய கடிதத்தைப் படித்தேன். இரவு விருந்தில் ஹெலன் சிக்சு, அரியான் முஷ்கின், ஜூலியா கிறிஸ்தவா ஆகியோரை சந்திப்பதாக ஏற்பாடு. கருத்தரங்கு பாம்பிதூ நூலகத்தின் மேல் தளத்தில். கிறிஸ்தவாவின் மாணவி ஒருவரே எனக்கு உதவியாளர். நான் உங்கள் கடிதத்தைப் படித்துவிட்டு சிரித்தேனா அந்த மாணவி என்ன விஷயம் என்று கேட்டார். நகைச்சுவை, பொய், புகழ்ச்சி மூன்றுக்கும் மயங்காத பெண்ணோ கலைஞன்/எழுத்தாளனோ உலகத்திலுண்டோ என்று கேட்டேன். பிறகு உங்கள் கடிதத்தை எனக்குத் தெரிந்த ஃப்ரெஞ்சு, ஆங்கிலத்தில் அவளுக்கு மொழி பெயர்த்துச் சொன்னேன். 

அவளுக்கு உங்கள் கடிதத்தின் ஒரு அம்சம் மட்டும் பிடிக்கவில்லை. அதாவது தமிழ்நாட்டை மறைமுகமாக தாழ்த்த காங்கோ என்று நீங்கள் குறிப்பிட்டது.  அதிலும் உண்மையிலேயே மாகுவே கபாம்பா என்று காங்கோ நாட்டின் பெண் எழுத்தாளர் ஒருவர் இருக்கிறாராம். அவர் ‘காலனீயக் கடன்’ என்ற புகழ் பெற்ற நூலை எழுதியிருக்கிறாராம். அவர் ஷேக்ஸ்பியர் எழுத்தாளரே இல்லை என்று வாதிடுவதற்கு வாய்ப்பே இல்லையாம். எப்படி அப்படிச் சொல்லப்போச்சு உங்கள் நண்பர் என்று பிடி பிடியென்று பிடித்துவிட்டார். இல்லை சாரு சொல்வது கற்பனையான பாத்திரம் என்று விளக்குவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. மேலும்  நிஜ வாழ்க்கை மனிதர்களை அவர்களை நினைவூட்டுகின்ற வகையிலேயேதான் நீங்கள் புனைவுகள் எழுதுவீர்கள் அந்தப் பழக்கமே இந்தக் கடிதம் எழுதும்போதும் கையில் வந்துவிட்டது அவருக்கு ஆனால் அவர் சொல்கிற கபாம்பா கற்பனை நிஜ கபாம்பாவுக்கு எந்த சம்பந்தமுமில்லை என்றேன். காங்கோ ஆப்பிரிக்க நாடு என்பதினால் கறுப்பர்கள் நாடு என்பதினால் எப்படி வளர்ச்சி குன்றியது என்ற பொருள் தரும்படி நீங்கள் எழுதலாம் என்றாளே பார்க்கலாம் அடுத்து. கிறிஸ்தவாவுடன் இரவு விருந்திற்கு அழைத்துச் செல்வாளோ மாட்டாளோ என்று எனக்கு பயமாகிவிட்டது.

சாருதான் பாட்ஷா பட ரஜினி மாதிரி புதிதாய் மாறிவிட்டேன் என்கிறாரே என்று பாட்ஷா ரஜினி கதாபாத்திரம் பற்றி கார்தி நோருக்கு ஃபோன் பண்ணி தமிழ் நண்பர்களிடம் கேட்டேன். ஆமாம் அந்தப் படத்தில் ஆட்டோக்காரராய் நல்ல பிள்ளையாய்தான் பழைய தாதா வாழ்க்கையிலிருந்து விடுபட்டு இருப்பார். ஆனால் அவ்வபோது எனக்கு வேறு ஒரு பெயர் இருக்கிறது என்று ஆட்காட்டி விரலைத் தூக்கிக்காட்டி எல்லோரையும் நையப்புடைப்பார், மணவடையிலிருந்து மணமகளைக் கூட்டிச் செல்வார், பழைய அடிதடியை ஞாபகப்படுத்தி எல்லோரையும் பின்னி எடுத்துவிடுவார் என்றார் அந்த நண்பர். உங்கள் கடிதத்தில் உள்ளதை அப்படியே அவருக்குப் படித்து காட்டினேன். முத்து நீ செத்தாய், எக்சைல் நாவலைப் படித்துவிட்டு, நரை மூப்பு எல்லாம் வந்து விட்டது சாருவுக்கு என்று நினைத்து குப்பை கிப்பை என்று ஏதாவது நீ எழுதினியோ நான் முன்பு எப்படி தெரியுமான்னு கேட்டு உன்னை விளக்குக் கம்பத்தில் டின் கட்டிவிடுவேன் ஜாக்கிரதை என்கிறார் சாரு என்றார் நண்பர்.

கிறிஸ்தவா மாணவி ஒரு கோப்பை வைன் கொண்டுவந்தாள். இரவு விருந்திற்கு அரியான் முஷ்கினின் புற நகர் நாடக அரங்கிற்கு செல்ல வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் சிறிது நடனமாடிவிட்டுப் போகலாம் என்றாள் அந்த மாணவி. 

பாரீஸின் குளிருக்கு வைன் குடித்தது கத கதப்பாகவே இருக்கிறது. சாரு உண்மையிலேதான் பாராட்டுகிறார் போலும் என்றும் தோன்றுகிறது.

Saturday, October 29, 2011

சாருநிவேதிதாவிற்கு எம்.டி.முத்துக்குமாரசாமி பிடித்த எழுத்தாளன் ஆனது குறித்து


குறிப்பு: சாருவின் மலையாள வாசகர்களுக்கும் உடனடியாக போய்ச்சேர வேண்டும் என்பதற்காக மலையாள வாடையுடன் இந்தக் குறிப்பு எழுதப்பட்டுள்ளது.

எழுத்தாளர் சாருநிவேதிதா

பழைய சேக்காளி, (தமிழ் இலக்கிய சிற்றிதழ் சூழலில் வயது வித்தியாசமும் கிடையாது இப்போது இணைய வாசகர்கள் பேசுவது போல சார் மோர் என்ற பேச்சு முறையும் இருந்ததில்லை) கூட்டுக்காரன், சாரு நிவேதிதா எனக்கும் ஜெயமோகனுக்குமிடையில் பாரதி சம்வாதம் கிறங்கி கிறங்கி எங்கோட்டு போயோன்னு வாசக ஜனமெல்லாம் குருவாயூரப்பனை ஒரு பாடு கூவிக் கூப்பிடலாமென்கையில் சோட்டானிக்கரை பகவதி  அருளால் நாவல் எழுதி முடித்த கையோடு விட்டார் பாருங்கள் ஒரு இடுகை எனக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர் எம்.டி.முத்துக்குமாரசாமி என்று. நானும் வாசகர்களும் வாத்து மேய்ப்பதையே முழு நேரத் தொழிலாய் செய்வதாய் சாருவுக்கு எண்ணம் போலும்.
சில பல வருடங்களுக்கு முன்பு தீராநதி பேட்டி ஒன்றில் கேட்ட கேள்விக்கு நான் ஏதோ ஒரு வரி பதில் சொல்லப்போக சாரு ‘மம்மி ரிடர்ன்ஸ்’ அப்படின்னு ஒரு துண்டுப்பிரசுரம் போட்டு, அதை எனக்கு கர்ம சிரத்தையாய் தபாலில் அனுப்பி வைத்து, இண்டெர்னெட்டில் போட்டு பெகளம் கிளப்பினது தமிழ் பப்ளிக் அறியும். ஜெயமோகனாவது என்னை ரைஃபிளோடு ஊர் திரும்பின பட்டாளத்துக்காரன்னுதான்  விளிச்சு. ஆனால் நிங்கள் என்னை பிணமாக்கியில்லே சாரு. பழைய கூட்டுக்காரனை சவக்குழியில் தள்ளி R.I.P பலகை நட்டதல்லே ‘மம்மி ரிடர்ன்ஸ்’? இப்போழ் எதிரிக்கு எதிரி நண்பன்னு ஆயிப்போயோ? பொது விவாதம் பண்ணும்போழ் எங்கெனையாக்கும் அது? நாள ஞான் ஸீரோ டிகிரி குறிச்சு பட்டம் பரப்பித்தேனெங்கில் என் சவக்குழி மேல் ஏறிச் சாடுமில்லே நீங்கள்? ரெண்டு கைப்பிடி வாக்கரிசி போட்டால் துள்ளி எழுந்து சலாம் வைக்கும் சவமென்னு அல்லே என்னை நிங்கள் நினைச்சு? அல்லெங்கில் உங்கள் ரெண்டு பேருக்குமான  லோக்கல் பாடி எலெக்‌ஷனுக்கு புறத்தே ஆரும் இண்டிபெண்டெண்டாட்டு நிக்க கழியாதா?
ஞான் அறிங்ய சாரு வெள்ளம்பியானு. அயாளை ஞான் திரிச்சு நோக்கான்பக்ஷே சந்தோஷம் உண்டும்.  

அயாளின் ஒரிஜினல் முகம் ஞான் திரிச்சி காணட்டும். 

மற்றபடி ஞான் சாருவுக்கு பிடிச்ச எழுத்தாளனெங்கில் அதுக்கு ஒரு courtesy நன்னி லிகிதம் போட்டுண்டு. 

மீண்டும் நன்றி.

முத்தம்


ஆந்த்ரே தார்கோவ்ஸ்கியின் படங்களை நான் மீண்டும் மீண்டும் பார்க்கிறேன். பல முறை பார்த்ததால்  தார்கோவ்ஸ்கியின் அத்தனை படங்களும் என் நினைவுகளின் அடுக்குகளாய் சேகரமாகிவிட்டன. என் பகற்கனவுகளிலும், பிரேமைகளிலும் தார்க்கோவ்ஸ்கியின் படக்காட்சிகள் அவ்வபோது வந்து போகின்றன. அவைகளின் சங்கேதங்களை முழுமையாக நான் புரிந்து கொண்டுவிட்டேனென்றால் வாழ்வின் மேலுள்ள நம்பிக்கைகள் அனைத்தும் குலைந்துவிடுமோ என்ற பீதி எதிர்பார்க்காத தருணங்களில் என்னை பீடிக்கவே செய்கிறது. புரிபடாத அழகுகளின் பிம்ப நூலகமாக தார்கோவ்ஸ்கியின் படக்காட்சிகளை என்னுள் சேமித்து வைத்திருப்பதால் வேண்டும்போதெல்லாம் விரும்பிய காட்சியை என் மனத் திரையில் விரித்து ஊக்கம் கொள்வேன்.
தானாக என் பகற்கனவில் தோன்றும் போது  பேரழகின் புதிர்களென என்னைக் கலங்க அடிக்கும் தார்க்கோவ்ஸ்கியின் படக்காட்சிகள் என் விருப்ப அகத் திரையிடல்களில் நம்பிக்கைகளின் ஆதாரமாவதன் மர்மமென்ன?
சோலாரிஸ் படத்தில் விண்வெளிக் கப்பலின் ஜன்னல் வழி வியாபகம் பெறும் பௌதீக அண்டத்தின் காட்சிகள் என் கனவா அல்லது துகளிலும் அணுவிலும் கூட இருக்கின்ற யதார்த்தமா? ஐயா, அம்மா எனக்கெதற்கு இப்படியொரு காட்சி? இங்கேயொரு காட்சிப்பிழையில்லையோ? 
ஆப்பிள் கணிணித் திரை



தீய வழிகாட்டி விதவிதமான நிலப்பகுதிகளின் வழி பதில் சொல்வதாய் அழைத்துச் செல்கிறான். குறியீடுகளுக்கும் படிமங்களுக்கும் உள்ள அர்த்த எல்லை என்ன என்று காட்டிவிட்டு மறைந்து விடுகிறான். தார்க்கோவ்ஸ்கி நீ கட்டைல போவாய், நீ நாசமாய் போவாய் என்று புழுதி வாரித் தூற்றிவிட்டு ‘Stalker’ படம் பார்த்துவிட்டு மனம் குமுறுகிறேன்.

Stalker படக் காட்சி

ஆந்த்ரே ரூபலேவ் படத்திலா, மிர்ரெர் படத்திலா என்று நினைவில்லை. எழுதும்போதே பகற்கனவுக்குள் சென்றுவிட்டேனோ? பழம்பெரும்  மாளிகையொன்றில் அலங்கார ஆளுயர நிலைக்கண்ணாடி முன் தவழும் குழந்தை, ஸ்லோ மோஷனில் மேலெழும்பிப் பறக்கும் காய்ந்த சருகுகள், முள் கம்பி வேலியைப் பிடித்தபடி நிற்கும் அந்தப் பெண்ணின் முகம், Sacrifice படத்தில் தீப்பற்றி எரியும் அந்த வீடு என எல்லா காட்சிகளும் கலந்து தோன்றி மறைகின்றன.

மிர்ரெர் படக்காட்சி

Sacrifice படத்தில்

எனக்கு நேர்கோட்டில் எழுதவே வருவதில்லை. தொழில் முறையாக எழுத்தை இன்னும் பயிலவில்லை. எல்லா தார்க்கோவ்ஸ்கி பிம்பங்களும் என்னுள் குழம்பிவிட்டன. Tarkovsky retrospective is a failure. ஏதேனும் ஒரே ஒரு காட்சி அதை மட்டும் பிடித்தே நான் தப்பிக்க வேண்டும். சாப்பிடவேண்டும். வேலை செய்ய வேண்டும். உயிர் பிழைத்துக்கிடக்க வேண்டும்.
பன்னிரெண்டே வயதான இவான் இரண்டாம் உலகப்போரின்போது குழந்தை உளவாளியாய் இருக்கிறான். இந்த இவானின் குழந்தைப்பருவம் என்ற தார்க்கோவ்ஸ்கியின் படம் அவருடைய முதல் படம். கனவுகளின் தொகுப்பெனவே நகர்கிறது கதை. விக்கிபீடியாவில் கதையைப் படித்து திரும்பத் தமிழில் சொல்வதற்குத்தான் இன்னும் பலர் இருக்கிறார்களே. இவானின் குழந்தைப்பருவம் படத்தில் அந்தப் பைன் மரக் காட்டினூடே அந்த ராணுவ வீரன் அந்தப் பெண்ணின் பின்னாலே காதலுடன்  செல்கிறான். விழுந்து கிடக்கும் நீண்ட மரத்தின் மேலேறி அவள் நடந்து செல்கிறாள். மரத்திலிருந்து கீழிறங்கிச் செல்லும் அவள் பள்ளம் ஒன்றைத் தாண்டவேண்டும். அதைத் தாண்ட அவளுக்கு உதவ அவள் கைபற்றி தூக்கிவிடுகையில் தன் வசமிழந்து அவளை முத்தமிடுகிறான். பின்னணியில் குண்டுகளின் முழக்கம் கேட்ட வண்னமிருக்கிறது. குண்டுகளை சட்டை செய்யாமல் உணர்ச்சிக்கு ஒப்புக்கொடுத்த முத்தம். நன்றி ஆந்த்ரே, இந்த ஒரு காட்சியை வைத்தே நான் உன்னிடமிருந்து தப்பிவிட்டேன். இல்லை இல்லை உன்னிடம் மீண்டும் சிக்கிக்கொண்டேன்.

இவானின் குழந்தைப்பருவம் என்ற படத்தில் முத்தக் காட்சி
தொடர்புடைய பதிவுகள்:  
இல்லை

Thursday, October 27, 2011

நான் அதி புத்திசாலியே



ஸ்பெயினிலுள்ள பார்சலோனாவில் 1874-1918 வரை நாடகங்களுக்கான அரங்க அமைப்பு
பார்க்க புத்தகம்: http://www.fabernett.com/cgi-bin/fab455/45908.html


நான் ஒரு மக்கு, மண்டூகம் என்பது உலகப் பிரசித்தமாக இருக்கையில்தான் நான் அதிபுத்திசாலியா என்ற பொதுவிவாதத்தைத் தொடங்கினேன் என்பது அனைவரும் அறிந்ததே. என்னோடு விவாதித்தவர்கள் அனைவருமே நான் புத்திசாலி என்பதை நிரூபிக்கவே படாதபாடுபட்டபோது அவர்கள் எப்படி என்னை அதி புத்திசாலி என்று நிறுவமுடியும்? இந்த சந்தர்ப்பத்திலே நண்பர்கள் என் கருத்தாக்கமான நான் மக்கு மட்டுமல்ல இடி மக்கே என்ற என் வாதத்திற்கு எதிராக நானே வாதாடி நான் அதி புத்திசாலியே என்று நிறுவமுடியுமா என்று கேட்டார்கள். ஆர்வமூட்டும் வினா.
நான் அதி புத்திசாலியா விவாதத்தை என்னோடு விவாதித்தவர்கள் வாதம் முன்னகர உதவினாலும் எனக்கு உவகையூட்டும் வகையில், திருப்தி அளிக்கும் வகையில் அவர்கள் வாதத்தை முன்னெடுத்துச் செல்லவில்லை. ஆகையால் எதிர்தரப்பு சொல்லியதையெல்லாம் என் தரப்பினதாக மாற்றி நான் வாதிட்டிருந்தால் நான் அதி புத்திசாலியே என்று எப்படி நிறுவுவேன் என்பதை விளக்கிக்காட்டப் போகிறேன்.
அபத்த தரிசனம் என்ற என் பதச்சேர்க்கைதான் என் வாசிப்பு என் விமர்சன முறைமையின் அளவுகோல் என்பதை நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியே வந்துள்ளேன். நல்ல மனிதன் என்ற பதச் சேர்க்கையியில் சொல்லப்படும் மனிதன் நல்லவன் என்ற பொருள்படுகிறது, அது போலவே அபத்த தரிசனம் என்றால் தரிசனம்தானே அபத்தம் என்று பொருள்படும், தரிசனம் அபத்தமானால் அது எப்படி தரிசனமாகும் என்ற கேள்வி நல்ல கேள்வியே. 
தரிசனங்கள் அனைத்தும் அபத்தமானவை என்றே மேலை கீழை தத்துவங்கள், இலக்கியங்கள், வரலாறுகள் எல்லாவற்றையும் வாசித்து வந்திருக்கிறேன். பின் அமைப்பியல், பின் நவீனத்துவம் ஆகிய பதார்த்த சேர்க்கைகளில் பின் என்றால் மனித உடலின் பின் பாகம் என்று நான் புரிந்துகொண்டதும், கொத்து பரோட்டா போட்டதும் அபத்த தரிசனத்தின் வழியே. என் இலக்கிய கோட்பாடுகள் கட்டுரையைப் படிப்பவர்கள் நான் நகைச்சுவை என்று அதை வில்லை அடையாளப்படுத்தியிருப்பதை சும்மா என்று கண்டுகொண்டு சீரியசான கட்டுரையாகவே வாசிப்பார்கள் என்று நான் உணர்ந்தே இருக்கிறேன். இளம் வாசகர்களை உய்விக்கும் பொருட்டு நான் எழுதிய என் இதர புத்தகங்களின் சாராம்சமும் பின் பாகங்களைப் பற்றியதே என்றும் உலகம் அறியும்.
இவ்வாறாக என் அபத்த தரிசனத்தோடு என்னை வளர்த்தவர்கள், என்னோடு விவாதம் புரிந்தவர்கள் ஆகியோரின் கருத்துக்களை உறிஞ்சி உறிஞ்சியே நான் என் புத்தகங்களை எழுதினேன் என்று காலங்களின் சுவடுகளை விட்டுச் சென்ற எழுத்தாளர் புலம்பு புலம்பென்று புலம்பியிருக்கிறார் என்பது நான் அறிந்ததே. அவர்களை கேவலப்படுத்துவதிலும் நான் சளைத்தவனில்லை. அவரின் மயானத்தை நோக்கி நானொரு சிறு குரூர புன்னகையே சிந்தமுடியும். காலங்கள் அகாலமாகும் என்பதை அறியாதவர் அவர். நொடி பக்கவாட்டில் விரிவடைந்து அகாலமாவது அறியாமல் காலம் கடற்கரையில் விட்டுச் செல்லும் சுவடுகளை எழுதியவர் அவர். சுவடுகளுக்கு குறடுகளே, பாதக் குறடுகளே எஞ்சும்.
ஜமேதார்கள் வெள்ளிப்பூண் கம்புகளையும், இரும்புத் தடிகளையும் கையிலேந்தி முன் நடக்க, விக்கிப்பீடியாவைப் பார்த்து பார்த்து டிவைன் காமெடி மொழிபெயர்ப்பைப் புரிந்துகொள்ள நான் படாத பாடுபட்டுக்கொண்டிருக்கையில் என் தலை மயிரில் தாந்தேயும், கதேயும், கம்பனும், வியாசனும் இழை இழையாய் துள்ளிக் குதித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று நான் சொன்னால் பிடுங்கித் தாருங்கள் ஓரிரு இழைகளை என்றுதானே கேட்கிறது என் முன்னே கைகட்டி, வாய்பொத்தி நிற்கும் கூட்டம். யாருக்குத் தெரியும் இன்று பூமணி எழுதி முடித்திருக்கும் நாவலுக்கான மானியத்தின் மூல நிதியும், கதா விருதுகளுக்கான மூல நிதியும், புதுமைப்பித்தன் ஆவணக் காப்பகத்திற்கான மானியத்தின் மூல நிதியும், க்ரியாவின் தற்காலத் தமிழகராதி தயாரிப்பதற்கான நிதியுதவியும், புரிசை கண்ணப்பத்தம்பிரானை இன்று உலகுக்கு அறியச் செய்த கூத்துப்பட்டறைக்கும், ரோஜா முத்தையா நூலகத்திற்கும் நிதி ஃபோர்ட் ஃபவுண்டேஷனிலிருந்து வந்ததுதான் என்று. இவையெல்லாம் ரகசியங்களல்ல. பொது வெளியில், இணையத்தில் காணக்கிடைக்கின்ற தகவல்களே. ஆனால் யார் தேடி எடுத்து படிக்கிறார்கள்? இந்த விபரங்களுக்கே இப்படியென்றால் இலக்கியம், இலக்கிய விமர்சனம், தத்துவம், ஆகியவற்றின் கதி என்ன? எல்லோரும் என்னுடைய ஓரிரு மயிரிழைகளுக்காகத்தானே காத்திருக்கிறார்கள்? ஆகவேதான் ஓடி விளையாடு பாப்பா என்று ஓடி விளையாடிவிட்டேன் 'இலக்கிய கோட்பாடுகள்' கட்டுரையில்.
அசடுகளுக்கும் பிசடுகளுக்கும் அகத்திறப்புகளை நிகழ்த்துதே என் பணி என்பதினால் மாற்று வாசல்கள் அனைத்தையும் இறுக்கி சாத்திவிட்டேன் என்பதினாலும், எல்லோரையும் அவர்கள் உழைப்பினையும், அவர்கள் படிப்பறிவையும் சுலபமாக நான் கேவலப்படுத்திவிட்டேன் என்பதினாலும், நான் மக்கு அடி மக்கு என்ற என் தரப்பு வாதத்தில் தோற்றுவிட்டேன் என்பதினாலும், என்னை அதிபுத்திசாலியில்லை என்று யாராலும் நிரூபிக்கமுடியவில்லை என்பதினாலும் நான் அதி புத்திசாலியே என்று முடிக்கிறேன். 

Wednesday, October 26, 2011

என் ஆசிரியர் ஏ.கே. ராமானுஜன்







1990 ஆம் ஆண்டு கொடைக்கானலில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறை ஒன்றில் ஒரு மாத காலம் பேராசிரியர் ஏ.கே.ராமானுஜனிடம் மாணவனாய் பாடம் கேட்டேன். காலை உரைகளுக்குப் பின் மாலை வேளைகளில்  உரையாடிக்கொண்டே மலைப்பாதையில் நடப்பது இரண்டொரு நாளிலேயே வழக்கமாகிவிட்டது. அவருடைய அமெரிக்க மாணவர்களைப் போலவே என்னையும் அவரை ராமன் என்று அழைக்கவேண்டுமென்றார்; சீக்கிரமே வயது வித்தியாசம் தாண்டிய இயல்பான நட்பு அரும்பிவிட்டது.
சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், நவீன தமிழ் சிறுகதைகள், நாட்டுப்புறக்கதைகள், கவிதை  என்று மெலிதான நகைச்சுவையுடன், நுட்பமான விளக்கங்களுடன் அவர் பேசுவதைக் கேட்பது அலாதியான அனுபவம். ராமன், ராமன் என்று அவருடைய அத்தனை அமெரிக்க மாணவர்களும் அவரிடம் சொக்கிக்கிடந்ததற்கு அசோகமித்திரனைப் போன்ற நகைச்சுவை தவிர ஒரு ஆசிரியருக்கே இருக்கவேண்டிய பெருந்தன்மையும் சாதாரண உரையாடல்களில்கூட இழந்துவிடாத கவி மொழியும் அவருக்கு இருந்ததே என்று நான் அடிக்கடி நினைப்பேன். கவிதை எழுதும்போது மட்டும் அவர் கவிஞனாக இருக்கவில்லை, வாழும் கணம்தோறும் அவர் கவிஞராகவே இருந்தார். கட்டுரை எழுதினாலும் சரி, மொழி பெயர்த்தாலும் சரி உரையாடலோ, பேருரையோ அவர் ஒரு கவிஞரே என்பதையே உலகுக்குச் சொல்லும். 
கொடைக்கானலில் எங்கள் மாலை நடை உரையாடல்கள் தமிழ் நவீன சிறுகதைகளைப் பற்றியியதாயிருந்தது. சா.கந்தசாமியின் கதைகளில் சொல்லாமல் சொல்லும் நுட்பம் ராமனை வெகுவாக கவர்ந்திருந்தது. ‘தக்கையின் மீது நான்கு கண்கள்‘ தொகுப்பில் சா.கந்தசாமியின் கதை சொல்லும் பாணி, அவருடைய அடங்கிய தொனி ஆகியவற்றை ராமன் வியந்து வியந்து பல மணி நேரம் பேசுவதை நான் மௌனமாக மரியாதையுடன்  கேட்டிருக்கிறேன். 
சொல்லாமல் சொல்லுதலையும், தன்னைத் தானே சுட்டிப் பேசுகின்ற பிரதிகளையும் ராமன் வெகுவாக ரசித்தார். ராமாயண நாட்டுப்புறக் கதையொன்றில் தான் மட்டும் காட்டுக்குப் போவதாய் சொல்லும் ராமனிடம் சீதை எல்லா ராமாயாணங்களிலும் ராமனோடு சீதையும்தானே காட்டுக்குப் போகிறாள், இந்த ராமாயணத்தில் மட்டும் எப்படி அவள் போகாமலிருப்பாள் என்று கேட்பதை விளக்கி இலக்கியப்பிரதி என்பதே தன்னைச் சுட்டுவதும், பல பாட பேதங்கள் கொண்டிருப்பதும், வெவ்வேறு பிரதிகளோடு தொடர்பு படுத்தப்படுவதும், பல் வகை வாசிப்புகளை அனுமதிப்பதும்தான் என்று ராமன் விளக்குவதைக் கேட்க கேட்க இலக்கிய வாசிப்பு என்பதே மனத்திலொரு சாகசம் போல் விரியும். ராமன் தன் வாசிப்பைக் கொண்டே அவரை கவிஞனாகக் கருதவேண்டும் தான் எழுதியதை வைத்து அல்ல என்று அவருக்கே உரிய நகைச்சுவையோடு சொல்லுவார். 
லவனும் குசனும் ராமாயணத்தில் ராமனுக்கே அவனுடைய கதையையே சொல்லுதலென்ற கதை சொல்லல் உத்தி எப்படியெப்படியான வாசக பங்கேற்புகளை அனுமதிக்கிறது எனவே வாசகப்பங்கேற்பின் மூலமே ராமாயணம் இதிகாசமாகிறது என்பார் ராமன். பல பாட பேதங்கள் இருப்பதும், தொடர்ந்து பேதங்கள் வளர்வதும், வெவ்வேறு கதாபாத்திரங்களின் வழி அதே ராமாயாணம் வித விதமாகச் சொல்லப்படுவதும் ராமாயாணம் என்ற இதிகாசம் மக்கள் காப்பியமாக இருப்பதற்கான சான்றுகள் என்று ராமன் சொல்வார். 
கொடைக்கானல் நாட்களுக்குப் பிறகு எங்களிடையே தொடர்ந்த கடிதப்பரிமாற்றம் இருந்தது. தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்க வேண்டியதின் முக்கியத்துவம் பற்றியும், மொழி பெயர்ப்பின் சிக்கல்களைப் பற்றியுமே அவருடைய கடிதங்கள் பேசின. சங்க இலக்கியத்தை ‘Poems of love and war’ என்று அவர் மொழிபெயர்த்திருந்தது ராமனுக்கு உலகளாவிய புகழைப் பெற்றுத் தந்திருந்தது. அதுவரை சங்க இலக்கியங்களுக்கு இல்லாத வகையில் அவர் மொழிபெயர்ப்பு முதன்மையானதாகவும், மொழிபெயர்ப்பு என்ற சிறு உணர்வையும் ஏற்படுத்தாவகையில் இருக்கக்கூடிய ஆங்கிலக்கவிதைகளாகவுமே  அவை வாசிக்கப்பட்டன. ராமனின் சங்கக்கவிதைகளின் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புகளிலேயே tour de force என்று கருதப்படுகிறது. அவர் நம்மாழ்வாரின் பாசுரங்களை ‘Hymns for Drowning’ என்று மொழிபெயர்த்தது சங்கக்கவிதை மொழி பெயர்ப்பு போல புகழ் பெறவில்லை. ராமன் எனக்கு எழுதிய கடிதங்களில் நம்மாழ்வாரின் எந்தெந்த கவித்துவ அம்சங்கள் ஆங்கிலத்திற்குள் செல்லவில்லை என்று படித்து எழுதுமாறு கேட்டுக்கொள்வார். நான் சொல்லும் அம்சங்களை கனக்கிலெடுத்து மொழிபெயர்ப்பினை நுட்பமாக்கி மீண்டும் எழுதுவார். இவ்வாறாக  1993இல் அவர் மறையும் வரை எங்களிடையே மொழிபெயர்ப்பு குறித்தான கடிதப்பரிவர்த்தனை தொடர்ந்தது. 
ஒரு மொழிபெயர்ப்பு தன் தாய்மொழியின் இயல்புகளைக் கொண்டிருப்பதைக் காட்டிலும் அது செல்கின்ற மொழியின் தன்மைகளையே வெளிப்படுத்த வேண்டும் அப்போதுதான் மூல மொழிப்பிரதிகளுக்கு நாம் நியாயம் செய்தவராவோம் என்று ராமன் உறுதியாகச் சொல்லக்கூடியவராக இருந்தார். மொழிபெயர்ப்பில் ஆர்வமுடைய அவருடைய பல மாணவர்களும் ராமனோடு ஒத்துப்போகவில்லை. ராமனின் ஒரு சில மாணவர்களும் அவருக்குப்பின் மொழிபெயர்ப்பின் முறைமைகள் பற்றி விவாதிப்பவர்களும் மூல மொழியின் தனித்துவங்களே செல் மொழியிலும் அழுத்தம் பெறவேண்டும் என்றும் அப்போதுதான் செல்மொழியின் பல்வகைத்தன்மை வளம் பெறும் என்று வாதிட்டனர்; கூடவே பல்மொழித்தன்மையை ஒரு மொழியில் வளர்த்தெடுப்பதென்பது பல்வகைப் பண்பாடுகளை போற்றுவதற்கான ஒரு வழிமுறையை சமூகத்தில் உண்டாக்குவதாகும் என்றும் வாதிட்டனர். நம்மாழ்வார் மொழிபெயர்ப்பு கடிதப்பரிவர்த்தனையில் ராமன் தன் ஆரம்ப நிலையிலிருந்து மாறி மூல மொழியின் தனித்துவங்களுக்கு அழுத்தம் கொடுப்பதும் அப்படி அழுத்தம் கொடுக்கப்பட்ட தனித்துவங்களை போற்றவைப்பதுமே சிறப்பான மொழிபெயர்ப்பாகும் என்று தன் கருத்து  எப்படி மாறி வந்தது என்றும் குறிப்பிடுகிறார்.
பன்மொழித்தன்மை, பல பண்பாட்டுத்தன்மை, பண்பாடுகளின் தனித்துவ கூறுகள் ஆகியவற்றைப் போற்றுதலே ராமனின் விழுமியமாக இருந்தது.
1993 இல் நான் அவரைப் பார்ப்பதற்காக சிகாகோ நகருக்குச் சென்றேன். என்னை விமான நிலையத்தில் சந்தித்து அவருடைய வீட்டிற்கும், பின்னர் சிகாகோ பல்கலைக்கழகத்திற்கும் அவர் என்னை அழைத்து செல்வதாக ஏற்பாடு. ராமன் விமான நிலையத்திற்கு வரவில்லை. மின்னஞ்சல் வருகைக்கு முந்தைய நாட்கள் அவை. தொலைபேசியிலோ பதிலில்லை. சிகாகோ விமான நிலையத்திலேயே பொழுதைக் கழித்துவிட்டு வேறு வழி தெரியாமல் வாஷிங்டன் நகருக்குப்போய்விட்டேன்.
வாஷிங்டன் சென்ற பிறகுதான் தெரிந்தது. ராமன் முந்தைய தினம் இயற்கை எய்திவிட்டாரென்று. வாஷிங்டன் போஸ்டும், நியுயார்க் டைம்சும் ராமனின் மரணச் செய்தியை முதல் பக்கத்தில் பெரிதாய் வெளியிட்டிருந்தன. இரண்டு பத்திரிக்கைகளுமே ராமன் கவிஞர் என்று குறிப்பிட்டு அவர் சங்க இலக்கியத்தையும், நம்மாழ்வார் பாசுரங்களை மொழி பெயர்த்ததையும் பெரிதாகக் குறிப்பிட்டு தமிழ் பாரம்பரியக் கவிதைகளையும், கவியுலகையும் மொழி பெயர்த்து அமெரிக்க பண்பாட்டின் பன்முகத்தன்மை வளமாவதற்கு பங்களித்த பெருந்தகையென்று புகழாரம் சூட்டியிருந்தன.


தமிழில் ஏ.கே.ராமானுஜன் பற்றி எஸ்.ராமகிருஷ்ணண் எழுதியுள்ள விரிவான முன்னுரையை கீழ்க்காணும் சுட்டியில் படிக்கலாம்.

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=1031

ஜமாலன் எழுதிய கட்டுரைக்கான சுட்டி:

http://ettuththikkum.blogspot.com/2009/07/blog-post_26.html
இன்றைக்கு ஏ.கே.ராமானுஜனின் முந்நூறு ராமாயணங்கள் என்ற கட்டுரையை டெல்லிப் பல்கலைக்கழகம் தன் பாடத்திட்டத்திலிருந்து எடுத்துவிட்டது என்ற செய்தியைப் படித்தபோது, அதற்காகக் கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் எல்லோரும் சேர்ந்து எதிர்ப்புக்குரல் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது என்பதைப் படிக்கும்போது ராமன் நம் சமூகத்திற்கும், நம் இலக்கிய பாரம்பரியத்திற்கும் ஆற்றியிருக்கும் தொண்டு, பன்மைக்கலாச்சாரம் என்ற விழுமியம் இவற்றை நாம் குறைந்தபட்சமாகவாவது அறிந்திருக்கிறோமோ என்ற சந்தேகமே எழுகிறது.
ஏ.கே.ராமனுஜனின் முந்நூறு ராமாயணங்கள் கட்டுரையை கீழ்க்கண்ட சுட்டியில் வாசியுங்கள். இதை எந்த காரணத்திற்காகவேனும் பாடத்திடத்திலிருந்து  நீக்க முடியுமா என்று சிந்தியுங்கள்.
அவ்வாறு நீக்கியது தவறு என்று நீங்கள் நினைத்தால் டெல்லி பல்கலைக்கழகத்திற்கு ராமனின் கட்டுரையை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்த்தி அறிவுறுத்தும் கீழ்கண்ட மனுவில் ஒப்பமிட்டு ராமனின் கட்டுரையை நீக்கியதற்கு எதிர்ப்பையும், மீண்டும் சேர்ப்பதற்கு ஆதரவையும் தெரிவியுங்கள்
மேலும் இந்த விவகாரம் பற்றி படிக்க
http://www.telegraphindia.com/1111027/jsp/opinion/story_14672561.jsp 

Tuesday, October 25, 2011

ஜென் தருணத்திற்கான முடிவுறா சந்தர்ப்பங்கள் (ஜெயமோகனுக்கு)


அன்புள்ள ஜெயமோகன்:
உங்களுடைய நன்றிக் கடிதம் படித்தேன். நாகர்கோவிலில் மின் தடை இவ்வளவு அதிகமாக இருப்பது கவலையைத் தருகிறது. சிறு தொழில்கள் என்ன ஆகும்?
நான் முன் வைத்த வாதத்தை நீங்கள் புரிந்து கொண்ட முறையில் இன்னும் சில பிழைகள் இருக்கின்றன. ஆத்மார்த்தமான அக எழுச்சி பாடல்களை எழுதியிருக்கிறார் பாரதி என்று நான் சொல்லவில்லை. நீங்கள் சொல்வது போல பிழைபட்டுச் சொல்கையில் அக எழுச்சிப்பாடல்கள் என்பவை பாரதி எழுதிய இதர வகைப்பாடல்களான விடுதலைப்போராட்ட பாடல்கள், பக்திப் பாடல்கள் போல இவையும் ஒரு வகை என்பதாகக் குறுகுகிறது.  
ஆத்மார்த்தமாக நம்முடைய (வாசகனுடைய) அகத்தோடு பேசக்கூடிய குரலைக் கொண்டிருப்பவை பாரதின் பாடல்கள் என்பதே என் மைய வாதம். இந்தக் குரலின் தன்மையைச் சுட்டிக்காட்டவே டி.எஸ். எலியட்டின் ‘பாழ் நிலத்தோடு’ நான் ஒப்பிட்டுக்காட்ட வேண்டியிருந்தது. கவிதையில் ஆத்மார்த்தமாக பேசும் இந்தக் குரலின் அந்தரங்க சுத்தியை மேலும் மேலும் தூய்மையாக்கவே சங்க அகப்பாடல்களிலும் சரி, பக்திக் கவிதைகளிலும் சரி தீவிர கவித்துவ முயற்சி நடந்திருக்கிறது. இந்தக்குரலை இலக்கியப்பாரம்பரியமாகப் பெறும் பாரதி, தன் மரபு மெய்யியலை தீவிரமான விசாரணைக்குட்படுத்தி தன் விடுதலை, சக மனித விடுதலை, சமூக விடுதலை மூன்றையும் நிரந்தரப் பிணைப்பிலிருத்தும் கவிக்குரலை உருவாக்குகிறார். இதனால் பாரதியின் அத்தனை பாடல்களுமே -ஒரு சில என்று நீங்கள் குறிப்பிடுவதுபோலில்லாமல்- மெய்யியல் கவிதைகளாக இருக்கின்றன.
அவ்வாறு பாரதி தன் கவிக்குரலை சுத்தியுடையதாய் செய்தது நீங்கள் குறிப்பிடுகிற பத்தொன்பதாம் நூற்றாண்டின் நவ வேதாந்த இயக்கமா, முப்பால் மணி குறிப்பிடுவதுபோன்ற பாண்டிச்சேரி தலைறைவு  வாழ்க்கையில் பாரதி விசிஷ்டாத்வைதத்திற்கு மாறியதா என்ற வரலாற்றுத் தரவு சார்ந்த காரண காரியங்களைச் சற்றே விவாதத்திலிருந்து விலக்கிவைப்போம். ஏனெனில் அத்வதை வேதாந்தம் பாரதியின் கவிக்குரலை உருவாக்கத்தக்க ஆற்றல் கொண்டதா, இந்திய மரபுகளில் அத்வைத வேதாந்தம் என்ன பங்காற்றியிருக்கிறது, அதற்கும் இந்திய அழகியலுக்குமிடையிலுள்ள தொடர்புகள் என்ன என்பதெல்லாம் தனியான நீண்ட விவாதத்திற்கும் பரிசீலினைக்கும் உரியவை.
பாரதி இவ்வாறாக உருவாக்கிக்கொண்ட கவிக்குரல் காண்ட் குறிப்பிடுவதுபோன்ற Transcendental ethical inner voice என்றும் நான் சொல்லியிருப்பதை கவனியுங்கள். பாரதி தன் கவிக்குரலைக் கண்டுபிடித்தபின் எழுதிய அத்தனை கவிதைகளுமே தேசபக்திப்பாடல்கள், பக்திப்பாடல்கள் என அனைத்துமே இறுதியான பரிபூரண உண்மையைச் எடுத்தியம்புகின்ற பாடல்களாகிவிடுகின்றன. தேசம், மொழி, பெண் விடுதலை, சாதிகளும் வர்க்கங்களுமற்ற சமூகம் எல்லாமே பாரதியிடத்து மெய்யியலின் பரிபூரண இறுதி உண்மைகளாகின்றன. மாகாளியும், பராசக்தியும், சுதந்திர தேவியும், பாரத மாதாவும் பாரதியிடத்தே ஒத்த ஆன்மீக வடிவங்களாகின்றனர். 
சுதந்திரப் போராட்ட காலத்தில் பல்லாயிரக்கணக்கோரை  செயலுக்குத் தூண்டும் சக்தியை (agency) கொடுக்கும் வல்லமை பாரதியின் கவிதைகளுக்கு இருந்ததும் அதனால்தான். சுதந்திர இந்தியா, திராவிட இயக்க காலகட்டம், ஈழத்தமிழர் இனப்படுகொலை ஆகிய மூன்று அறிவுத்தோற்றவியல் சட்டகங்களுக்குள்ளே (epistemological frameworks)  வைத்து பாரதியின் கவிதைகளை கட்டவிழ்த்துப் படித்தாலே கவிதையயும் நம் காலகட்டத்தையும் நாம் அறிந்துகொள்வோம் என்பது என் வாதத்தின் முறையான நீட்சியாகும். ஈழத்துக் கவிஞர் றியாஸ் குரானாவின் 'எனது அறையில் பேயாகி அலைகிறது பாரதியின் கவிதைகள்' என்ற கவிதை பாரதியின் தேச பக்திப்பாடல்களிலுள்ள மெய்யியல் உண்மையான தேசம் என்பதினை நம் காலகட்டத்திற்கேற்ப கட்டவிழ்த்து காட்டுகிறது என்பது என் துணிபு.
மற்றபடி தன் மெய்யியல் மரபுகளைத் தீவிர விமர்சனத்திற்கு உள்ளாக்கி transcendental ethical inner voiceஐ அடையாளம் கண்டு அதை நம் அகத்தோடு  ஆத்மார்த்தமாக பேசுகிற கவிக்குரலாய் சுவீகரிப்பவனை எல்லா மொழிகளுமே, எல்லா பண்பாடுகளுமே மகாகவி என்று மட்டுமல்ல அதி மானுடன், யுக புருஷன் என்றெல்லாம் கூட கொண்டாடத்தான் செய்யும். நீங்கள் இப்பொழுது எழுதியிருக்கும் பாரதி மகாகவியே என்ற கட்டுரை உங்களுக்கு நீங்களே எழுதிக்கொண்ட self help recipeயே தவிர வேறொன்றுமில்லை. உங்களைத்தவிர எல்லோருக்கும் இலக்கிய அடிப்படைகளின்படி பாரதி மகாகவி என்று நன்றாகத் தெரிந்தேயிருக்கிறது.
என் விமர்சன முறைமையோடும் அது சொல்கிற விஷயங்களோடும் நீங்கள் உரையாடுவதும் உரையாடமலிருப்பதும் உங்கள் விருப்பம். ஆனால் அவற்றைப் பிழைபட புரிந்துகொள்ளலாகாது. 
றியாஸின் தேநீர் சீக்கிரம் ஆறிவிடுகிறது. என் தேநீர் விருந்தினில் தேநீரின் சூடும் ஆறுவதில்லை சுவையும் குன்றுவதில்லை. உங்கள் ஜென் தருணத்தினை தேர்ந்தெடுப்பதற்கு முடிவுறா சந்தர்ப்பங்கள் காத்துக்கிடக்கின்றன.
அன்புடன்,
எம்.டி.முத்துக்குமாரசாமி

Monday, October 24, 2011

கோச்சுக்காதே மக்கா!


தாஜா 1
ஜெயமோகன் கோபித்துக்கொண்டுவிட்டார் போலிருக்கிறது. தேநீர் அழைப்பிற்கு பதிலில்லை. பாரதி விவாதம் அவர் தரப்பிலிருந்து தொடர்கிறதா என்று தெரியவில்லை. மாப்பு  கேட்கலாமென்றாலும் ஏன் எதற்கு அவர் கோபித்துக்கொண்டிருக்கிறார் என்றும் தெரியவில்லை. அவர்தான் என்னையும் சேர்த்து கட்டவிழுங்கள்  உடைந்து சிதறி மீண்டும் ஒட்ட வைக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை என்று பின்னூட்டமிட்டார். சரி என்று கட்டவிழ்ப்பு என்றால் மெய்ய்யியலை, மெய்யியல் வாதங்களை உண்மைகளை தீவிரமாக விமர்சிப்பதே என்று சுட்டிக்காட்டினேன். அவர் என்னை வசைபொழிய நான் அவருக்கு எந்த உரிமையையும் அளிக்கவில்லை ஆனால் அவர் பல இடங்களில் வசை பாடினார். பொறுத்துக் கொண்டேன். உங்களுடைய ரசனை விமர்சனத்தின் கருத்தியல் எந்திரம் என்றால் என்ன என்று விளக்கட்டுமா என்றதற்கு அதெல்லாம் எனக்கு ஏற்கனவே தெரியும் என்றார். சரி என்று விட்டுவிட்டேன். அப்புறமும் என்ன கோபம்? சரி கொஞ்சம் தாஜா செய்து பார்க்கிறேன். என்ன அவரை ஒருமையில் அழைக்க வேண்டியிருக்கும். ஆனால் அவர்தான் எனக்கு அவரை கிண்டலடித்துப்பேச உரிமை கொடுத்து அவருடைய வாசகர்களை அமைதிப்படுத்தியிருக்கிறாரே. ஆகையால் கீழே ஒரு பத்தி மட்டும் அவரிடம் பெற்ற சிறப்பு சலுகையை பயன்படுத்தி:
கோச்சுக்காதே மக்கா. நீ பெரிய ஆள்தான். என்ன, தப்புத்தப்பா பேசர. எனக்கு நாகர்கோவில். வடிவீஸ்வரம். நீ நெல்லைன்னு எழுதர. பார்வதிபுரம் சர்குலர பிடிச்சேன்னு வை மீனாட்சிபுரம் ஜங்ஷன்ல எரங்கினா வீடு பக்கம்தான். உள்ளூர்காரன உள்ளூர்னு கூட தெரில. இப்டி எலக்கியத்துலயும் வரலாத்துலையும் பன்ரியா. ஐடியாசையும் தப்பு தப்பா புரிஞ்சிகிற. Literature of the absurd பத்தி எளுதும்போது ‘அபத்த தரிசனம்’ அப்டின்னு எளுதரையா அதப் படிச்சு சிரிச்சேன் பாரு. ஷாஜி ஷாஜின்னு ஒரு பயல் கிடக்கானில்லையா அவனைப்பத்தி நீ எளுதன கட்டுரயப் படிச்சுகூட அவ்ளவு சிரிக்கல, பாத்துக்க. நீ எப்டி கலாப்ரியா ஜெனெரேஷன் ஆன? கிருதா நரச்சுருச்சு, ஆனா நான் ஒன் வயசுக்காரன் டை அடிக்கிரதில்ல அப்டிங்கிறதினாலேயா? நீ ரொம்ப சண்டமாருகம் பன்றியா, அதான். கொஞ்சம் விட்டுப்பிடிடே. அதுக்காக தும்ப விட்டுட்டு வாலப்பிடிக்காத. அப்றம் புலி வாலப் பிடிச்சவன் கத ஆயிடப்போகுது. நல்ல  harmless humor பழகிட்டு வா. ‘கோடோவுக்காக காத்திருத்தல்’ எளுதினான் பாத்தியா அபத்த தரிசனம் கண்ட ஆளு பெக்கெட் அவன் போட்டோவ கீழ கொடுத்துருக்கேன். பாத்துக்க. 



தாஜா 2 அல்லது ஐயன்மீருக்கு மேலதிகவிளக்கம்
நண்பர்கள் பலர் அவர் என்னுடைய ‘நல்ல’ புகைப்படங்களை அவர் தளத்தில் பிரசுரித்து நான் அவருடைய நல்ல புகைப்ப்டத்தை வெளியிடவில்லை அதனால்தால் தேநீர் அழைப்புக்கு பதிலிலல்ை என்கிறார்கள். ஜெயமோகன் என்ற எழுத்தாளர் மகாகவி பாரதியார் உள்ளிட்ட பிற முக்கியமான எழுத்தாளர்களையும், சிந்தனையாளர்களையும், கவிஞர்களையும் போலவே அல்லலுற்ற ஆத்மா. அவர் விஷ்ணுபுரம் கைப்பிரதியாய் இருந்தபோது அதன் பல படிநிலைப் பிரதிகளையும் பெரிய சூட்கேசில் தூக்கிக்கொண்டு போவதைப் பார்த்திருக்கிறேன். உட்கார்ந்த இடத்தை விட்டு சிறுநீர் கழிக்கக்கூட எழுந்துபோகமுடியாமல் compulsive- ஆக தொடர்ந்து 120 பக்கங்களெல்லாம் ஒரே இருப்பில் எழுதியதை எனக்கு எழுதிய கடிதங்களில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த nervous energy வெளிப்படும் ஜெயமோகனோடுதான் என்னுடைய என்றென்றைக்குமான நட்பு இருக்கிறது. பைத்திய நிலையும் நனவின் அறிவுக்குமிடையே ஊசலாட்டத்தில்தான் கலையும் எழுத்தும் பிறக்கின்றன. அப்படி அலைக்கழிக்கப்படும் மனத்தை எலியட் போல கோட் சூட்டு போட்டிருந்தாலும்சரி பஞ்சப் பனாரியாய் கஞ்சாவும் அபினும் உட்கொண்டு புரட்சியாளனாய் பிரிட்டிஷ் அரசாங்கத்தினால் தேடப்பட்டு உருக்குலைந்து அழிந்த பாரதியாய் இருந்தாலும் சரி   ஊடுருவிப்பார்த்து இனம் கண்டு கொண்டாடி காப்பாற்றுவதே விமர்சனம், கலை இலக்கியச் செயல்பாடு. ஜெயமோகனுக்கு நினைவு இருக்கிறதோ இல்லையோ ஒரு முறை சுந்தர ராமசாமி வீட்டில் அவரைப்பார்த்தபோது அவர் நகத்தைக் கடித்து கடித்து நகக்கண்ணிலிருந்து ரத்தமே வந்துவிட்டதைப் பார்த்தேன். என் நினைவில் அந்தக் காட்சியே அவரது படிமமாய் தங்கிவிட்டது. அந்த அல்லலுற்ற ஜெயமோகனை நான் இந்தத்தளத்தில் எடுத்துப்போட்டிருக்கும் புகைப்படத்தில்தான் மீண்டும் அடையாளம் கண்டேன். ஆகவேதான் நண்பர் ஜெயமோகன் என்ற தலைப்பில் பிரசுரித்தேன். இந்தப் பைத்திய கணங்களுக்கு கலை இலக்கிய வெளிப்பாடுகளில் போற்றத்தக்க இடம் இருப்பதாகவும் அதற்கென்று விழுமியமொன்று இருப்பதாகவும் நான் நினைக்கிறேன். இது பற்றி  நான் சமீபத்தில் நான் எழுதிய பைத்திய நிலையும் கலை இலக்கியமும் என்ற கட்டுரையையும் விருப்பமுள்ளவர்கள் படிக்கலாம். என் தனிப்பட்ட வாழ்க்கையையோ பழக்க வழக்கத்தையோ வேறு யாரும் குறிப்பிடுவது எனக்கு சம்மதமில்லாத ஒன்று. ஆனால் ஜெயமோகன் தன் வாழ்க்கையும் பழக்க வழக்கங்களையும் தன் இலக்கியத்தின் பகுதியாகவே கருதி விவாதிக்கவேண்டும் என்கிறார். 
பாரதி விவாதத்திற்கு இந்தக் குறிப்பு எதற்குத் தேவைபடுகிறது என்றால் பாரதி ஒரு பைத்தியக்காரனாகவே அவர் வாழ்ந்த காலத்தில் சித்தரிக்கப்பட்டார். அவர் வந்தேறியாக பாண்டிச்சேரிக்கு ஓடிபோனது, தீவிரமாக தன் மரபு மெய்யியலை பரிசோதித்து புது மனிதனாய் மாறியது எல்லாமே கடுமையான அல்லலுற்றதினால் ஏற்பட்டவை. அவர் வாழ்ந்த காலத்தில் பாரதி ஆங்கிலேயருக்குக் கைகட்டி சேவகம் செய்த ஆதிக்க வர்க்கத்தினருக்கு எதிரான anti establishment எதிர் கலாச்சார கலை இயக்கத்தினரே. உலகெங்கும் முன்னோடி கவிஞர்கள் இவ்வாறாகவே எதிர் கலாச்சார சிறு குழுக்களிடத்தில் உருவாகிறார்கள். ஜெயமோகன் தமிழ் சிற்றிலக்கியச் சூழலில் உருவாகியது போல. நான் இதுவரை பாரதி விவாதத்தில் எதிர் கலாச்சாரம் என்ற பதச் சேர்க்கையைப் பயன்படுத்தவேயில்லை. ஜெயமோகனே மீண்டும் மீண்டும் என் விமர்சன முறைமையை சிறுமைப்படுத்தும் முகமாக எதிர்கலாச்சாரம்  (ஒருவகையான negative connotation உடன்) என்பதையும் நான் பயன்படுத்திய பின் நவீனத்துவ பின் காலனீய என்ற பதங்களோடு சேர்த்து சொல்லியதால் இதை எழுத நேரிட்டது. 
பிரம்மஞான சபை, அது பரப்பிய வேதாந்தம் என்று ஜெயமோகன் குறிப்பிடுகிற விபரமெல்லாம் ராமச்சந்திர குகா போன்றோரின் பெருங்கதையாடல் வரலாறு எழுத பயன்படுமே தவிர இலக்கிய விமர்சனத்திற்கு உதவாது. ஏனெனில் அந்தப் பெருங்கதையாடல் வரலாறு பாரதி எழுதிய தமிழ் நாடு, தமிழ் நாகரீகம் ஆகியவற்றைப் புகழ்ந்து எழுதிய பாடல்களையும் அதனால் அவர் பின்னால் வந்த திராவிடக் கவிஞர்களின் மேல் அவர் செலுத்திய தாக்கத்தையும் பார்க்கவிடாமல் தடுக்கிறது. 
தவிர, வரலாற்று ஆசிரியர்கள் எல்லோருமே ஒரு காலகட்டத்தின் பெரு நிகழ்வை வைத்து மட்டுமே காலகட்டங்களைப் பிரிப்பர். ஆகஸ்ட் 15, 1947 என்ற இந்திய சுதந்திர தினம் இந்திய வரலாற்று தொடர்ச்சியில் ஒரு பெறும் பிளவினை ஏற்படுத்திய ஒன்றாக சாதாரண பள்ளிக்குழந்தை கூட புரிந்துகொள்ளக்கூடியதே. இதனாலேயே சுதந்திரத்திற்கு முன் சுதந்திரத்திற்குப்பின் என்று வரலாற்று காலகட்டங்கள் பகுக்கப்பட்டு ஆராயப்ப்டுகின்றன. பின் நவீனத்துவம் வரலாற்றின் பெரும் நிகழ்வுகள் என்பவற்றை மட்டும் கணக்கில் கொள்ளாமல் அறிவுத்தோற்றவியல் பிளவினையும் (epistemological break) கணக்கிலெடுத்துக் கொள்கிறது. இதையே நான் ஜெயமோகனுக்கு புரிகிற வகையில் “‘இன்றைக்கு பாரதியின் மதிப்பு’  என்றால் நாட்காட்டியிலுள்ள தேதியைக் குறிப்பதல்ல  இன்றைக்கு என்ற சொல். அமைதியாய் ஓடும் கங்கையில் வரலாற்றின் சுழிப்புகளைப் பார்த்துத் தொகுப்பதைச் சுட்டுவதல்ல இன்றைக்கு என்ற சொல். ஆகாயகங்கை ஆவேசமாய் தரையிறங்கும்போது சிவனின் ஜடாமுடி தொடும் தருணத்திற்குப் பெயரே இன்றைக்கு.” என்று எழுதினேன். 
அரிதாகவே வரலாற்று நிகழ்வும் அறிவுத்தோற்றவியல் பிளவும் ஒருங்கே நிகழ்கின்றன.  தென்னிந்தியாவில் அமர ஜீவி என்றழைக்கப்படும் பொட்டி ஶ்ரீராமுலு உண்ணவிரதம் இருந்து உயிர்த்தியாகம் செய்த டிசம்பர் 16, 1952 ஆம் தேதியே இந்திய விடுதலை நாளுக்குப் பின் மொழி வாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டதும் மொழி வழி தேசிய கற்பிதங்கள் உருவாவதற்கான அடுத்த அறிவுத்தோற்றவியல் பிளவு உண்டான நாளாகும். தமிழர் சரித்திரத்தில் அடுத்த அறிவுத்தோற்றவியல் பிளவு என்பது துரதிருஷ்டவசமாக ஈழத் தமிழர் படுகொலையான கால கட்டமேயாகும்.
புலி ஆதரவு, புலி எதிர்ப்பு, புலிகள் சிறுபான்மையினோர் உறவும் உறவின்மையும் என்றெல்லாம் வாதப் பிரதிவாதங்கள் நிரம்பிய சொல்லாடலுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. அது என் துறையும் அல்ல. ஆனால் எட்டு கோடித் தமிழர் பார்த்திருக்க சுமார் இரண்டரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதும் முள் கம்பி இருப்பிடங்களில் அடைக்கப்ட்டதும், கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக சுமார் மூன்றரை லட்சம் மக்கள் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து அலைந்ததுமே நமது இன்றைய அறிவுத்தோற்றவியல் சட்டகமாக இருக்கமுடியும். இந்த அறிவுத்தோற்றவியல் பிளவுக்கான மெய்யியல் என்ன அதன் வழி ஆத்மார்த்தமாக நம் அகத்துடன் பேசுகின்ற குரல் எங்கேயென்று தேடினால் பாரதியின் கவிக்குரல் ஒன்றே நம் மனத்திற்கு கிட்டக்கூடியதாய் இருக்கிறது.
இந்த தாஜா, மேல்விளக்கம் இவைகளுக்கும் ஜெயமோகனிடருமிந்து நேரடி பதிலில்லையானால் அவர் விவாதத்திலிருந்து விலகியதாகவும் சுப்பிரமணிய பாரதியார் மகாகவி என்றும் எல்லா விமர்சன அடிப்படைகளின்படியும் ஒத்துக்கொள்வதாகவும் நான் கருதுவேன். 
பாரதியின் கவிதைகளை கட்டவிழ்த்து வாசித்தல், க.நா.சு விமர்சன முறை, தமிழ் நவீன கவிதைகள் வாசிப்பு,  Kant- Marx குறிப்பு பற்றி பின்னூட்டத்தில் வந்தகேள்வி ஆகிய விவாத இழைகளை ஜெயமோகன் வந்தாலும் வராவிட்டாலும் நாம் தொடர்வோம்.
நம் உரையாடலைத் தொடர்வதற்காக றியாஸ் குரானாவின் கவிதையை வாசியுங்கள். 
வீட்டில் எவருமில்லாத நேரத்தில் பழைய 
நினைவுகளை பதுக்கிவைத்திருக்கும் 
பொருட்களையெல்லாம் அகற்றிக்கொண்டிருந்தேன்.
சில தற்காலிக சொற்களும்,சில பொருட்களும் 
மேசையிலிருந்து ஜன்னலவழியே பறந்துகொண்டிருந்தன.
அரவணைத்துக்கெண்டு புகைப்படத்திலிருந்த அவளும் 
அவனும் கண்ணீர் மல்க பிரிந்துகொண்டிருந்தனர்.வீட்டை
துப்பரவு செய்வதில் நான் கரிசனமுள்ளவனுமில்லை.
சோம்பேறியைவிட அசட்டையானவன்.வீடெங்கும் ஒரே
பிணநெடி.பலநாள் செத்துக்கிடந்த உடல்களினதைப்போன்ற
நாத்தம். இனிமேலும் சகிக்க முடியாது என்றுதான் சுத்தம் 
செய்ய இன்று தொடங்கினேன்.பாரதியின் கவிதைகள்தான் 
இதற்குக் காரணமென்று கண்டுபிடித்துவிட்டேன்.
அவனுடைய புத்தகத்தை எரிப்பதா புதைப்பதா 
ஒருவாறாய் எரித்து சாம்பலைப் புதைத்துவிட்டு 
வந்ததோடு எனது வேலை முடிந்துவிட்டது.
இறப்பற்று நெடுங்காலம் வாழக்கூடிய கவிதைகளை 
அவன் பெற்று வளர்க்காதது எனக்கும் வருத்தம்தான்.
மேசையில் புத்தகம் இருந்த இடத்தில் ஒரு முறை 
அவனைக்கண்டேன்.ஆவியாகிய அப்புத்தகம் எனது 
வீடெங்கும் அப்போதெல்லாம் அலைகிறது.புத்தகத்தின் 
பக்கங்களைப் புரட்டுவது மாதிரி சப்தங்கள் அறையெங்கும் 
கலவரப்படுத்துகிறது.நேரங்கெட்ட நேரமெல்லாம் யாரோ 
உரத்தகுரலில் கவிதைகளை படித்துக்கொண்டிருக்கிறார்கள். 
எனினும் எனக்கு அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே....

Sunday, October 23, 2011

வாருங்கள் ஜெயமோகன் தேநீர் அருந்தலாம்





பாரதி விவாதம் ஆரம்ப நிலையில் இருந்தபோது ஈழத்து கவிஞர் றியாஸ் குரானா ஃபேஸ்புக்கில் எனக்கொரு தேநீர் அழைப்பு அனுப்பியிருந்தார். அந்த அழைப்பினை உங்களுக்கும் நான் அனுப்ப விரும்புகிறேன். ஞாயிறு காலை உங்களிடமிருந்து அணக்கத்தையே காணோமா, கவலையிலிருக்கிறேன். இல்லை தூங்கி ஓய்வெடுத்து எழுதுங்கள் என்றதால் தூங்கிக்கொண்டேயிருக்கிறீர்களா? நான் சொல்வதைக் கேட்கும் வழக்கம்தான் உங்களுக்கு கிடையாதே. இல்லை நீங்கள் ரசனை விமர்சனத்தின்படி சொன்னதற்கு மேலதிகமாக என் பின் நவீன பின் காலனீய விமர்சனை முறையினால் நான் ஏதும் புதிதாகச் சொல்லிவிடவில்லை என்று மீண்டும் சொல்லப்போகிறீர்களா? நம் அகத்தோடு பேசும் குரலை பாரதியிடத்தில் கேளுங்கள் என்றேன். அது ஒன்றுதான் விசேஷம் என்றால் (நான் அது ஒன்றுதான் விசேஷம் என்று சொல்லவில்லை) சென்ற அரை நூற்றாண்டில் பாரதியின் மேல் வைக்கப்பட்ட மிகப்பெரிய வசை என்று சொன்னீர்கள். பொறுத்துக்கொண்டு உங்களுக்கு அகச் செவியில்லை என்று எழுதினேன். மீண்டும் மீண்டும் இன்றைக்கு பாரதி என்று பேசும்போது இன்றைக்கு என்பதற்கு என்ன பொருள் கொள்கிறீர்கள் என்று கேட்டேன். அரசியல்வாதி போல அயோத்திதாசர், வ.வே.சு. அய்யர், க.நா.சு. என்று பாண்டி ஆடிக் கொண்டிருந்தீர்களே தவிர ஒரு மெய்யில்வாதியாகவோ, கலைஞனாகவோ, விமர்சகனாகவோ, அறம் காக்கின்ற சிந்தனையாளனாகவோ நீங்கள் பதில் சொல்லவில்லை. நீங்கள் உங்களுக்காகவே வரித்துக்கொண்ட அடையாளங்கள் இவை. இவையெல்லாம் நீங்கள் இல்லையென்றால் நீங்கள் யார் ஜெயமோகன்? வெறும் வரலாற்றுத் தகவல்கள் தொகுப்பாளரா? நீங்கள் எப்படி நம் சம காலத்தின் முக்கிய எழுத்தாளர் ஆனீர்கள்? நம் உரையாடலின்போது பாரதியின் அத்வைதக் கவிதை என்று நீங்கள் நம்பும் ஒன்றை கட்டவிழ்த்துக்காட்டுங்கள் என்றேன். மிக அழகான சந்தர்ப்பம் அது. ஒவ்வொரு காலத்திலிலும் சிந்தனையாளர்களும் கவிகளும் தங்கள் மெய்யியல் மரபுகளை தீவிர விசாரணைக்குட்படுத்தி அல்லது என் விமர்சன முறை அழைப்பதுபோல கட்டவிழ்த்து கட்டவிழ்த்துதான் தங்கள் முறைமைகளை உருவாக்கிக்கொள்கிறார்கள். மெய்யியல் மரபு சொல்லும் பரிபூரண இறுதி உண்மையை தொடர்ந்து தீவிர விசாரணைக்குட்படுத்தியே நம் தத்துவங்கள் வளர்ந்திருக்கின்றன. சமணமும், பௌத்தமும், சைவமும், வைணவமும் தங்கள் மெய்யியல் உண்மைகளை ஒன்றினை வைத்து மற்றொன்றினை மறுத்து, உரையாடியே தங்களை புதுப்பித்துக்கொண்டன, அவையனைத்தும் தங்கள் வழிமுறைகளையும் தர்க்கவிவாதங்களையும் செயல்வடிவங்களையும் வெளிப்படையாகவே வைத்திருக்கிண்றன. எதையும் பூடகமாக்கவில்லை. பாரதியாரே தன்னுடைய மெய்யியல் மரபை கடுமையாக விமர்சனத்துக்குள்ளாக்கியே தன் கவிக்குரலில் ஆத்மார்த்தமும் அந்தரங்க சுத்தியும் ஏறச்செய்தார். பாரதியின் தத்துவ மரபு என்ற கட்டுரையில் முப்பால் மணி எழுதியுள்ளதை வாசியுங்கள்
 “தமிழ்நாட்டு ஸ்மார்த்தப் பிராமணர்கள் பிறப்பாலேயே அத்வைதிகள். இந்நிலையில் மேற்கூறிய அத்வைதக் கருத்தியல் பின்னணியிலேயே முதலில் பாரதியார் இருந்தார். அப்போது “தேகம் என்பது யான் அன்று, மேலும் அகவயமான யானும் பிரம்மம் அன்று, வாழ்வு என்பது கனவு” என ஏற்றிருந்தார். அதாவது சார்வாகம், உலகாயதம் போற்றியுரைத்த தேகாத்மம் என்பதை அப்போது இயல்பாகவே தமது சுயமரபு காரணமாக மறுப்புக்கொண்டிருந்தார், தேகமே ஆத்மாவாக உள்ளது, ஆத்மா எனத் தனியாக ஒன்றும் இல்லை என்பது தேகாத்ம வாதம், ஆனால் பாரதி இதை ஏற்கவில்லை, அவர் தேகம் வேறு, ஆத்மா வேறு, அவை தனித்தனி என்பதையே மேற்கொண்டு இறுதிவரை இப்படியே திகழ்ந்தார், "அகவயமான யான் என்பதே பிரம்மம் மற்றும் வாழ்வு என்பது கனவு" என்பன சங்கரரின் அகவய-அத்வைதம், இது அவருடைய சுயமரபு. இதிலிருந்துதான் அவர் மாறுபாடு அடைகிறார்.

1906 முதல் 1913 வரை அவரது வாழ்வில் பல நிகழ்வுகள் நடந்துவிட்டன. சொந்தக் குடும்பம், அரசியல், பத்திரிகை-எழுத்து என அவை பொலிவுபெற்றன. 1912-ஆம் ஆண்டில் அரசியல், பத்திரிகை ஆகியன தொடர்ச்சியற்றுவிட்டன. 1911-ஆம் ஆண்டில் குள்ளச்சாமி பழங்குப்பை, பழம்பொய் எனச் சுட்டிக்காட்ட, பாரதியார் கடந்தகாலத்திலிருந்து விடுதலை பெற்ற புதியவன் ஆனார். புதிய காற்றால் புதிய உயிராய்ப் பிறந்துவிட்டார். கோவிந்த ஞானியின் தொடர்பு கண்ட பின் எல்லாமுமே அனைத்துமே பிரம்மம், பரம்பொருள். தெய்வம், பரசிவம் எனத் தெளிந்தார். இதனோடு நிற்காமல் சம்சார விருத்திகள் பரம்பொருளின் விருத்திகள், செயல்கள் எல்லாம் சிவன் செயல்கள் எனத் தெளிந்து பகவத் கீதைக்கு முன்னுரை எழுதினார். விருத்தி என்பது இல்லையெனில் அழிவு, காதல் போயின் சாதல், விருத்தி என்றால் பிறப்பு-செயல்-மாற்றம்-இன்னொரு பிறப்பை ஈன்று விட்டு ஏகமாதல், இதுவே அத்வைத நிலை, முக்தி ஆகும் என்ற உறுதிக்கு வந்தடைந்தார். இதுவே அவரது மாற்றம், இயலுலக வாழ்வில் விருத்தி என்பது சமூக விருத்தி ஆகும்.” தன் மரபு மெய்யியலை விமர்சித்ததால்தான் பாரதிக்கு நம் அகத்தோடு பேசுகின்ற கவிக்குரல் கூடி வந்தது.

தன் மரபு மெய்யியல்களை தயவு தாட்சண்யமில்லாமல் விமர்சித்தே நாரயண குரு தத்துவ ஞானியானார். மெய்யியல் மரபுகளை விமர்சிக்கச் சொல்லித்தருபவனே நம் மதிப்பிற்குரிய குரு. அது நாராயண குருவாயிருந்தால் என்ன ழாக் தெரிதாவாயிருந்தால் என்ன, அவரவர் பாத்திரத்திற்கு ஏற்ற பிச்சை. மெய்யியல் மரபுகளை விமர்சிக்காமல் கிளிப்பிள்ளை போல் திரும்பச்சொல்பவன் மேலும் மேலும் பூடகமாக்குபவன் மதவாதி அரசியல்வாதி உண்மையை அறிவதில் ஆர்வமற்றவன், அதிகாரத்தில் பற்றுள்ளவன், தன் திறனின் உண்மையான பயன்பாடு தெரியாமல் சீரழிப்பவன். கவிஞர்களும் சிந்தனையாளர்களும் அறம் அறம் என்று சும்மா பேசிக்கொண்டிருப்பதில்லை. கவிஞர்கள் அறம் பாடக்கூடாது என்றே ஒரு இலக்கிய முது மொழி இருக்கிறது. கவிஞர்களும் சிந்தனையாளர்களும் புனைவெழுத்தாளர்களும் அறம் என்பதை வெளிசொல்லாமலேயேதான் தங்கள் படைப்புகளை முன் வைப்பார்கள். வாசகர்களே அவற்றைக் கண்டடைவார்கள்.
மெய்யியல் பற்றிப்பேசுவதால் நான் கருத்துமுதல்வாதி என்று களித்திருக்கும் நண்பர்கள் சிலருக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால் தெரிதாவின் ‘Spectre of Marx’ என்ற நூலை வாசித்துப்பாருங்கள். மார்க்சீயத்தினால் தீர்க்கப்ப்டாத தத்துவப் பிரச்சைனைப்பாடு ஒன்று உண்டென்றால் அது Kantian problematic தான். இம்மானுவேல் காண்ட் வர்க்கம் தாண்டி, சாதி மத பேதம் தாண்டி, பேசுபவனின் தகுதி தாண்டி காலம் இடம் தேசம் வர்த்தமானம் தாண்டி முழுத் தூய்மையான (absolute) அறத்தின் அகவயமான குரல் எப்படி ஒவ்வொரு மனிதனிடத்திலும் இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். அந்த ஊற்றுக்கண்ணிலிருந்தே பகுத்தறிவு ஆரம்பிக்கிறது என்றார். மேலை தத்துவத்தில் இது Kantian project என்று அறியப்படுகிறது. தெரிதாவின் கட்டவிழ்ப்பு விமர்சனம் காண்ட்டின் பகுத்தறியும் செயல்பாட்டினை Critical Praxis ஆக மாற்றுவது என்றே நான் எண்ணுகிறேன். அவ்வாறாகவே நான் எழுதுவதாகவும் நினைக்கிறேன்.
பாரதிக்குத் திரும்புவோம். பாரதியின் ஆன்மிகப்பாடல்கள் தொடங்கி, தேசப் பற்று பாடல்கள், தமிழ் புகழ்ச்சிப் பாடல்களெல்லாவற்றையும் கட்டவிழ்த்து படித்தோமென்றால் இந்திய தேசத்தில் எல்லாம் சௌக்கியம் என்று சொல்லிக்கொண்டிருக்க மாட்டோம். பாரதியின் கவிதைகளில் ஆத்மார்த்தமாகப் பேசும் குரலுக்கு செவி மடுத்திருந்தோமென்றால் அவர் சொல்லும் தேசம் எங்கிருக்கிறது, அதன் மக்கள் என்னவாயிருக்கிறார்கள், அந்த தேசத்தையும் மக்களையும் மீட்டெடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் ஆன்மீகம் என்றால் என்ன என்று நமக்குத் தெரிந்திருக்கும். நம்முடைய அகத்தோடு பேசும் பாரதியின் கவிக்குரலை நாம் கேட்டிருந்தோமென்றால் நம்மிடையே தனியாகவும் கூட்டாகவும் செயல்படுவதற்கான முறைமை (individual and collective agency)  இந்நேரம் உருவாகியிருக்கும். நாம் பாரதியைக் கட்டவிழ்த்துப் படிக்கவில்லை என்பதினால்தான் இப்படித் திக்கு தெரியாமல் திண்டாடி தெருவில் நிற்கிறோம்.
நான் இந்த வாதத்தில் உங்களிடம் தோற்றுப்போய்விட்டேன் ஜெயமோகன். உங்கள் எழுதும் ஆற்றல், சிந்தனைத் திறன் ஆகியவற்றின் முன்னால் நான் தவிடு பொடி ஆகிவிட்டேன். மொழிபெயர்ப்பிலும் வேலை செய்யவேண்டும், அதிக எண்ணிக்கையிலிருக்க வேண்டும், காப்பியக் கவி கம்பனோடும் ஒப்பிடத்தகுந்ததாக இருக்க வேண்டும் என்ற ஏற்கனவே வலுவற்ற உங்கள் அளவுகோல்களை முழுமையாக வலுவிழக்கச் செய்யவே என்னால் முடிந்தது. உங்கள் ரசனை விமர்சனத்தினால் என்ன சொல்லமுடிந்ததோ அதற்கு மேல் புதிதாக ஏதும் கண்டுபிடித்துச் சொல்லவில்லை. உங்கள் மலைப்பாம்பு போல நீளும் பல கட்டுரைகளில் பாரதியை தமிழ் நவீனத்துவத்தின் முன்னோடி என்று அழைத்து அவர் ஏன் மகாகவி என்பதை விளக்கி, பல இடங்களில் மகாகவி என்றே அழைத்திருக்கிறீர்கள். நம் நண்பரொருவர் நீங்கள் பாரதியாரை மகாகவி என்றழைத்த இடங்கள் எல்லாவற்றையும் ஸ்க்ரீன் ஷாட்டுகளாகத் தொகுத்து அனுப்பியிருக்கிறார். நானும் வாதத்தில் தோற்றுவிட்டபடியால் நீங்கள் ரசனைவிமர்சனத்தின் படி எழுதிய அத்தனையையும் தொகுத்து நம் பாரதி மகாகவிதான் என்று உலகுக்கு அறிவித்துவிடுங்கள்.
றியாஸ் குரானாவின் தேநீர் ஆறிக்கொண்டிருக்கிறது. சீக்கிரமாய் வாருங்கள். நீங்கள் அருந்துவது தேநீர் நான் அருந்துவது காபி என்றாலும் நம் மேஜை ஒன்றுதானே.
என் அழைப்பிற்கு உங்கள் பதில் பார்த்துவிட்டு என் பதிவினை எழுதுகிறேன்.  

Saturday, October 22, 2011

ஆத்மார்த்தமாக பேசும் கவிக்குரல்கள்: பாரதியும் டி.எஸ்.எலியட்டும்


முன் குறிப்பு: எதிர் அறம் என்ற பதச்சேர்க்கையை நேற்று காலை தட்டச்சு செய்யும்போது மனம் கூசியது; உட்சுருங்கி உடைந்து மௌனமாகி ‘மனதில் உறுதி வேண்டும்’ பாடலை மனனமாகச் சொல்லிப்பார்த்து மீண்டே எழுதினேன்.
பிக்காஸோவின் புகழ் பெற்ற, ஸ்பானிஷ் போருக்கு பிந்தைய ஓவியம், குவர்னிகா, எழுத்தாளர் ஆபிதீன் தளத்திலிருந்து எடுத்தது

டி.எஸ்.எலியட்டின் மொத்த படைப்புகளையுமே பாரதியின் படைப்புகளைப் போலவே ஒரு புத்தகத்திற்குள் அடக்கிவிடலாம். விரல் விட்டு எண்ணத்தக்க படிமங்களும், உவமைகளுமே எலியட்டின் கவிதைகளில் காணக்கிடைக்கின்றன. பூனைகள், காலைப்பனி, மேஜையில் மயக்க நோயாளியைப் போல கிடந்த மாலை,தெருவோர அனாதைக் கிழவன், காஃபி ஸ்பூனால் அளந்த எண்ணங்கள், என்று எளிதாக பட்டியலிட்டு விடலாம். அயோத்திதாசர் பாரதியை பார்ப்பனர் என்றது போலவே எலியட்டின் ஒரு சில வரிகளை வைத்து அவரை யூத வெறுப்பாளர் என்று அவருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தவர்கள் இருந்தார்கள். நல்ல வேளையாக பாரதியைப் போல எலியட் வறுமையில் உழலவில்லை, வங்கி அதிகாரியாக இருந்தார்.
எலியட்டை விட வயதில் மூத்த பவுண்ட் எலியட்டை விட எராளமாக எழுதிக்குவித்த பவுண்ட், எலியட்டையே கவி என்று கொண்டாடினார்.  நவீன காப்பியமான யுலிசஸ் எழுதிய ஜாய்ஸ், தத்துவ அறிஞரும் கடவுள் மறுப்பாளருமான ரஸ்ஸல் எலியட்டையே கவி என்றறிந்திருந்தனர்.  எதனால்? எலியட்டின் கவிதையிலே வாசகனின் அகத்தோடு ஆத்மார்த்தமாய் பேசக்கூடிய குரல் இருந்தது. முதலாம் உலகப்போருக்குப் பின் எழுதுகிற எலியட்டின் கவிதையில் பேசுகிற குரல் ஐரோப்பிய சமூக ஆன்மாவின் குரல். பாழ் நிலத்தில் அந்தக்குரல் தெள்ளத்தெளிவாய் Four quartets ஐ விட அணுக்கமாக வாசகனிடத்தே பேசுகிறது. அந்தக் குரல் உடைந்து போயிருக்கிறது; அவநம்பிக்கையுடனிருக்கிறது. கடவுள் கைவிட்டுவிட்ட குரல் அது. அல்லது கடவுளை கை விட்டு விட்டதால் பாதுகாப்பற்று அமைதியின்மையில் அலைவுறும் குரல். எதையாவது பற்றிக்கொள்ள முடியாதா என்று பரிதவித்து இலக்கிய பிரதிகளெங்கும் அலைந்து உகந்த வரிகளைத் தேடி அவைகளை கோர்த்து கோர்த்து சில சமயம் உரையாடலாய் சில சமயம் பிதற்றலாய் சில சமயம் தெருச்சொல்லாய் பிருகதாரண்ய உபநிடத்திலிருந்து சில வரிகளையும் சேர்த்துக்கொண்டு ஹிரானிமோ மீண்டும் பைத்தியமாகிவிட்டான் ஓம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஒரு collage ஆக அமைகிறது. போருக்குப் பிந்ததைய சமூகத்தின் தீவிர நெருக்கடி ஒவ்வொரு பிரஜையின் மனத்திலிருக்க அந்த மனத்தின் குரலாகவே எலியட்டின் கவித்துவ குரல் பாழ் நிலத்தில் அந்தரங்க சுத்தியுடன் பேசுகிறது. எலியட்டின் ஆத்மார்த்தமாகப் பேசும் கவித்துவ குரலை பவுண்டின் மேதமையே உடனடியாக அடையாளம் காணுகிறது. பின்னாளில் எலியட் தன்னுடைய இலக்கிய வம்சாவழியை தன்னுடைய முந்தையத் தலைமுறையினரான ரொமாண்டிக் கவிகளைத் தவிர்த்துவிட்டு ஆங்கில மெய்யியல் கவிஞர்களையே கவிதைகளையே தன்னுடைய இலக்கியப் பிரதிகளின் மூதாதைகளாக அடையாளம் காட்டுகிறார். ஆங்கில இலக்கிய பாரம்பரியமும் நவீனத்துவமும் ஒரே சமயத்தில் எலியட்டின் வாசகனுக்குக் கிடைக்கிறது.  ஒட்டு மொத்த சமூகமும் ஒருங்கிணைய தன்னை மீட்டெடுத்துக்கொள்ள தன்னை சுத்தி பண்ணிகொள்ள கலாபூர்வமாக மீண்டெழ வாய்ப்புகள் உருவாகின்றன. 
எலியட்டின் ஆத்மார்த்தமாக அந்தரங்க சுத்தியுடன் பேசும் கவிக்குரலுக்கு நிகரானது நம்முடன் பேசும்  பாரதியின் கவிக்குரல். எலியட்டின் கவிக்குரல் உள்ளடங்கி இருக்கிறதென்றால் பாரதியின் கவிக்குரலில் உணர்ச்சி தூக்கலாய் இருக்கிறது. பாரதிக்கு தமிழிலக்கிய பாரம்பரியம் பக்தி கவிதைகளின் மூலமேதான் வந்தடைகிறது. காட்சிப்படிமங்களுடன் கூடிய சங்க அகப்பாடல்களை இன்றைக்கு நாம் அடங்கிய தொனியுள்ளதாய் கணிப்பதும் எனவே ஏ.கே.ராமனுஜனின் மொழிபெயர்ப்பினால் எந்த சேதாரமும் இல்லாமல் எல்லோரையும் போய்ச்சேர்வதையும் வைத்து அவை நிகழ்த்துகலைகளாக இருந்தபோது அதே அடங்கிய தொனியோடு இருந்தவை என்று சொல்வது கடினம். ஏனெனில் நாட்டிய சாஸ்திரம் போல் தொல்காப்பியம் சாந்தத்தை தன்னுள் ஒரு மெய்ப்பாடாகவும் வைத்திருக்கவுமில்லை முதன்மைப்படுத்தவுமில்லை. இரண்டாவதாக திணை மயக்கப்பாடல்களை இறுதி வகைப்படுத்துதல்கான   முறையை சொல்லுமிடத்து உரிப்பொருளை வைத்தே அதாவது உணர்ச்சியை வைத்தே கவிதையைப் பிரிக்கவேண்டும் என்கிறது. இந்த இடத்தில் ஏ.கே.ராமானுஜனின் மொழிபெயர்ப்பில் நம்மாழ்வாரின் பாசுரங்கள் சங்கப்பாடல்கள் அடைந்த அதே வரவேற்பை கவிதைகளாய் பெறவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
பக்தியின் விசிஷ்டாத்வதமும், உணர்ச்சி உத்வேகமும் பெற்ற கவிக்குரல் பாரதியிடத்தே இயலுலக விருத்தி, தேக விருத்தி, சமூக விருத்தி, தேச விருத்தி, விடுதலை விருப்பம் கொண்ட எனவே தனித்துவமும் சுத்தியும் தீவிரமும் கொண்டதான உள் கலாச்சார முகம் நீக்கி திரும்பிவிட்ட ஆத்மார்த்தமாக வாசகனின் அகம் நோக்கி பேசக்கூடிய குரலாகிவிடுகிறது. தமிழின் நவீன கவிகளிலே  நகுலனிடத்தே இந்தக்குரலின் நீட்சியை தூக்கலாகக் கேட்க முடியும். நகுலன் தன்னுடைய ‘இன்று’ நாவலில் கைவல்ய நவநீதத்தை தன் உரையாடல் பிரதியாகக் கொண்டிருப்பதை நுட்ப வாசகர்கள் கவனிக்க வேண்டும். நகுலன் மகாபாரதத்தை வைத்து நீண்ட கவிதைகள் எழுதியிருப்பதையும் கவனிக்க வேண்டும்.  இப்போது பாரதியின் மனதில் உறுதி வேண்டும் கவிதையை வாசித்துப் பார்ப்போம்.
மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்,
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்,
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிரே பெருமை வேண்டும்,
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்,
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவமண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்,
உண்மை நின்றிட வேண்டும்,
ஓம், ஓம், ஓம்
முதல் வரியில் ஆத்மார்த்தமாக வாசக அகம் நோக்கி பேசுகிற குரல் தனக்குத்தானே கவிதைக்குள் பேசுகிற குரலாக இருப்பதையும் அது விரைவிலேயே சமூக விருத்தி வேண்டுகிற குரலாகவும் மாறிவிடுவதையும் கவனியுங்கள். அதாவது எலியட்டிடம் போருக்கு பிந்தைய சமூகத்தின் குரலாக உருப்பெற்ற  கவித்துவ குரல் பாரதியிடத்தே தன் விடுதலையை சமூக விடுதலையோடு நிரந்தரமாகப் பிணைத்துவிட்ட குரலாக தீவிரமடைகிறது. பாரதி கவிதைகளில் நிகழ்த்துதல் இந்த தனி மனிதனின் நீட்சியாகிவிட்ட  சமூகம் என்ற ஊடாட்டத்தில் நிகழ்வதால் ‘நல்லதோர் வீணை செய்தே’ போன்ற பாடல்களில் எலியட்டின் கவிக்குரலுக்கு நிகராக வாதையுற்ற குரல் நம்மோடு பேசுகிறது. 
பாரதியின் கவிக்குரல் தமிழின் உள் கலாச்சார முகம் நோக்கித் திரும்பிவிட்டதால்தான் அவருக்குப்பின் வந்த திராவிட இயக்க கவிகளுக்கும் பாரதியே ஆதர்சமாகிறார். பாரதி எழுதிய தமிழ் மொழியையும் தமிழ் நாட்டையும் தன் கவித்துவகுரலின் நீட்சியாக்கி எழுதிய பாடல்களை நாம் ஊன்றிப்படிக்க வேண்டும். அவையே தமிழ் இலக்கிய பாரம்பரியம் பாரதியிடத்து சங்கமிப்பது மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறை நவீன கவிகளுக்கும் வெகுஜன கவிகளுக்கும் தோற்றுவாயாய் இருக்கிறது. பக்தி இயக்கம், விடுதலைப் போராட்டம் போலவே திராவிட இயக்கமும் வெகுஜன இயக்கமாய் தமிழ் நாட்டில் பரிணமித்தபோது சுதந்திர இந்தியாவின் இதர பிராந்திய வெகுஜன மொழி இயக்கங்களில் இருந்து வேறுபட்ட திராவிட இயக்கம் கடவுள் மறுப்புக்கொள்கையை பிரதானமாய் கொண்டிருந்தது. பாரதியோடு  திராவிட இயக்கம் திறந்திருக்க வேண்டிய தமிழ் கவிதா மரபின் வாசல் அடைக்கப்பட்டு பக்தி இலக்கியங்கள் பொதுத்தளத்தில் வாசிக்கப்படாமல், பாரதி தனியே சங்க இலக்கியங்கள் தனியே என்று மரபின் தொடர்ச்சியோடு உறவுபடுத்தப்படாமலேயே பொதுத்தளத்தில் வாசிக்கும்படியாயிற்று. கன்னடியர்களுக்கும், மலையாளிகளுக்கும் அவர்களின் மொழிப்பாரம்பரியமும் நவீனமும் சேர்ந்து வெகு ஜன தளத்தில் கிடைத்துபோல நமக்குக் கிடைக்கவில்லை. வெகு ஜன தளமில்லாத தமிழின் முதல் நவீன கவிகளில் ந.பிச்சமூர்த்தி, க.நா.சு, நகுலன் தவிர வேறு யாருக்கும் தமிழ் செவ்விலக்கியத்தில் பரிச்சயமில்லை. திராவிட வெகு ஜன இயக்கத்தில் பங்கேற்காத அவர்களுக்கு சங்க இலக்கியமும் கிடைக்கவில்லை பக்தி இலக்கியமும் கிடைக்கவில்லை. பாரதியோடு ஒரு உப்புக்கு சப்பாணி உறவே இருந்தது. ஆங்கில நவீன கவிதையை ஆங்கிலத்தில் படித்து தமிழில் எழுதும் நவ காலனீய கவிகளாய் அல்லது அவர்களை முன் மாதிரியாகக் கொண்டு எழுதும் கவிகளாய் ஒரு தலைமுறை சேர்ந்துவிட்டது.
பாரதியின் ஒரு துண்டே நம்மிடம் இன்று இருக்கிறது. அந்த ஆத்மார்த்தமாக அந்தரங்க சுத்தியுடன் நம் அகத்தோடு பேசக்கூடிய குரலாக பாரதியின் குரல் மட்டுமே இருக்கிறது. ‘தந்தையர் நாடெனும் பேச்சினிலே‘  என்று சொல்லும்போது விட்டகுறை தொட்டகுறையாக கண் கலங்கத்தான் செய்கிறது. 
‘நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ’ என்பதை வாசிக்கும்போது நெஞ்சு விம்மித்தான் தணிகிறது.
ஆனால் இன்று பாரதியை நாம் துண்டு துண்டாகவே அறிகிறோம். அவர் மூலம் திறக்கும் வாசல்களின் வழி பக்தி இலக்கியத்தையும் சங்க இலக்கியத்தையும் எனவே காப்பியங்களையும், இலக்கண நூல்களையும், உரை நூல்களையும் பாட்டன் சொத்தாக நாம் இன்னும் சுயபோகமாகப் பெற்றிருக்கவில்லை. 
அதனால் நாம் இழந்தது என்ன தெரியுமா? 
தனி நபர் விடுதலையும், சக மனித விடுதலையும், சமூக விடுதலையும் நிரந்தரப் பிணைப்பிலிருத்தும் கவிக்குரலை. We have lost access to our transcendental ethical inner voice.
ஐயா பொதுஜனங்களே ‘இன்றைக்கு பாரதியின் மதிப்பு’  என்றால் நாட்காட்டியிலுள்ள தேதியைக் குறிப்பதல்ல  இன்றைக்கு என்ற சொல். அமைதியாய் ஓடும் கங்கையில் வரலாற்றின் சுழிப்புகளைப் பார்த்துத் தொகுப்பதைச் சுட்டுவதல்ல இன்றைக்கு என்ற சொல். ஆகாயகங்கை ஆவேசமாய் தரையிறங்கும்போது சிவனின் ஜடாமுடி தொடும் தருணத்திற்குப் பெயரே இன்றைக்கு.
ஐயா பொது ஜனங்களே ஈழத்தில் நடந்து முடிந்துவிட்ட தமிழினப் படுகொலைக்குப்பின் நாம் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் வையுங்கள்.  
இன்னும் ஓரிரு பதிவுகளில் என் தரப்பு வாதம் முற்றுப்பெறும்.

ஜெயமோகனுக்கு சில உடனடி எதிர்வினைகள்


உண்மையிலேயே ஜெயமோகனோடு வாதம் பண்ணுவதற்கு ஏகப்பட்ட சக்தி வேண்டும். இரவெல்லாம் தூங்க மாட்டாரோ? எங்கேயிருந்து எடுக்கிறார் என்னுடைய புகைப்படங்களை? நானும் அவருடைய புகைப்படம் ஒன்றைப் போட்டு கீழே உங்கள் ரசனை விமர்சனத்தில் அது ஓட்டை இது ஓட்டை என்று திட்டலாமென்று பார்க்கிறேன் அவர் தளத்திலுள்ள புகைப்படங்களில் ஒன்று கூட தேறவில்லையே. எல்லா புகைப்படங்களிலும் கே.வி. அரங்கசாமி வாங்கிக்கொடுத்த ஜீன்சைப் போட்டுக்கொண்டு நரைத்த கிருதாவோடு  ஒரு ரசனை விமர்சகனைப் போலவேயில்லையே!
ஹலோ ஜெயமோகன்,

நான் வைத்த சில கேள்விகளுக்கு உங்களிடமிருந்து இன்னும் பதிலில்லை.


பழைய பத்திகள் கீழே உடனடியாக refer பண்ண

{ரசனை விமர்சனம் பண்டு தொட்டு இருந்து வருவதுதான். ஒவ்வொரு காலகட்டத்திலும் அது சமூக ஏற்ற தாழ்வினை நிலை நிறுத்துகிற அழகியல் கோட்பாடாகவே இருந்து வருகிறது. நவரசங்களை வரைமுறைப்படுத்தி பகுக்கும் நாட்டிய சாஸ்திரமும் எண்சுவையை (எட்டு மெய்ப்பாடுகள்) வரைமுறைப்படுத்தி பகுக்கும் தொல்காப்பியமும் எந்தெந்த ரசனை எந்தெந்த சுவை எந்தெந்த வகுப்பு மக்களுக்கு உரித்தானது என்றும் கூறி சமூக ஏற்றதாழ்வினை அழகியலாக அறுதி செய்கிறது. நாட்டிய சாஸ்திரம் உதாரணமாக சாந்தம் என்ற ரசமே நவரசங்களில் மிகவும் உயர்ந்தது உயர் சாதியினருக்கு உரியது சிருங்காரம், ஹாஸ்யம் கீழ் சாதியினருக்கு உரியது என்கிறது. சாந்தம் தவிர்த்த எண்சுவையை விவரிக்கும் தொல்காப்பியமும் இவ்வாறாகவே சுவைகளை தன் சமூக  ஏற்றதாழ்வுகளுக்கு ஏற்ப படிவரிசைப்படுத்துகிறது. நம் சமகாலத்தில் ஏற்ற தாழ்வுகளை அறுதி செய்யும் அழகியலான ரசனை விமர்சனம் சந்தைப்பொருளாதாரத்தின் ஏற்றதாழ்வுகளையும் மதிப்பீடுகளையும் அழகியலாக்கும் முறைமை என்கிறேன். 
இரண்டும் வெவ்வேறு முறைமைகள் ஒன்றின் செயல்முறையை மற்றதில் எதிர்பார்க்கவோ, கலந்துகட்டி அடித்துவிடவோ முடியாது.
3. //ரசனை விமர்சனம் எப்போதுமே முதற்பேரிலக்கிய மரபு [canon] ஒன்றை நிறுவிக்கொண்டுதான் பேசும். அதுவே அதன் வழிமுறை. அந்த முதற்பேரிலக்கிய மரபிலிருந்துதான் அது தன் அளவுகோல்களை உருவாக்கிக் கொள்ளும். ஒப்பிடுவதன் மூலமே அது தன் தரமதிப்பீடுகளை உருவாக்கும்//
சரி. ரசனை விமர்சனம் செயல்படும் முறை அதுதான். ஆனால் canonization தனிப்பட்ட விமர்சகனால் மட்டும் உருவாக்கப்படுவதில்லை. ரசனை விமர்சகன் செயல்படும் காலகட்டத்திலுள்ள ஆதிக்க நிறுவனங்கள், அரசு, மத நிறுவனங்கள், சமூக ஏற்றதாழ்வுகள், சமூக அமைப்பினை புனிதமாக மாற்றி காப்பாற்றுகின்ற கருத்தியல் எந்திரங்கள்,போட்டி அமைப்புக்கள் எல்லாம் இணைந்தே பேரிலக்கியம் என்று ஒரு சிலவற்றை உச்சத்தில் வைக்கின்றன. ஜெயமோகன் பாரதிக்கு மகாகவி அந்தஸ்தை தர மறுத்து முன் வைக்கும் ரசனை விமர்சனமும் அவர் முன்னிறுத்துகிற அளவுகோல்களும் எந்த கருத்தியல் எந்திரங்களின் ( ideological apparatus) வழி கட்டமைக்கப்படுகின்றன என்று வாசகர்கள் பார்க்கவேண்டும்.}
நான் கேட்கும் கேள்வி உங்கள் ரசனை விமர்சனம் எந்த கருத்தியல் எந்திரங்களின் வெளிப்பாடாய் இருக்கிறது என்று நீங்களே எனக்கு விளக்குங்கள். ஏனெனில் நான் சொல்ல ஆரம்பிப்பதற்கு முன்பே இந்த பத்து பாயிண்டை சொல்லாதே மேலும் சொல்லு என்று ராவிழித்து எழுதிவிடுகிறீர்கள். இதே உத்தியைத்தான் பாரதி விவாதத்தின்போது உங்களோடு வாதாடிய ஜடாயு, மண்ணின் மைந்தன் முத்தையா ஆகியோரிடம் பயன்படுத்தினீர்கள். நன்றாகத் தூங்கி ஓய்வெடுத்து நான் கேட்கிற கேள்வியை preempt பண்ணாமல் உங்கள் விமர்சன முறை, அதன் தரவரிசைப்படுத்துதல்கள் எந்த கருத்தியல் எந்திரங்கள் சார்ந்தவை என்று சொல்லுங்கள். பாரதியை மகாகவி ஆக்கிய கருத்தியல் எந்திரங்களை பற்றி எழுதியிருக்கிறேனே என்ற உங்கள் பதிலை நான் ஏற்கனவே கேட்டுவிட்டேன்.
மரபின் மைந்தன் முத்தையாவிடம் எங்கே பாரதியில் தேறக்கூடிய கவிதைகளின் எண்ணிக்கை என்று நீங்கள் கேட்கவில்லை? 
என்னுடைய எலியட் கட்டுரையில் நான்  எண்ணிக்கையை வைத்து கவிதையை நாம்  அளக்கமுடியாது என்று demonstrate பண்ணுகிறேன். அதற்கு உங்கள் பதில் என்ன? 
நீங்கள் பதில் கட்டுரையில் குறிப்பிடும் அனைத்து நவ கவிகளும் பாழ் நிலத்தை மொழிபெயர்ப்பிலா வாசித்தார்கள்? எல்லோருமே நவ காலனீயச் சூழலில் ஆங்கிலத்தில் படித்தவர்கள்தானே? மொழிபெயர்ப்பிலும் வேலை செய்வதுதான் சிறந்த கவிதை என்ற உங்கள் ரசனை அளவுகோலுக்கு ஆதரவாக உங்கள் கட்டுரையில் என்ன இருக்கிறது?


என் கட்டுரையில் பாரதி கம்பன் என்று நீங்கள் ஒப்பிட்டு பேசியது தவறு என்பதை எலியட் ஹோமர் என்ற இணை மூலம் சுட்டியிருக்கிறேன். அதற்கு உங்கள் பதில் என்ன?
நான் ஒரு சிந்தனை ஒழுங்கில் உருவாக்கப்பட்ட கலைச்சொற்களை அந்த ஒழுங்குக்குட்பட்டுதான் பயன்படுத்துகிறேன். அதுவே சிந்தனையை துல்லியமாக்க உதவும். 
நீங்கள் உங்கள் பாரதி விவாதங்களை ‘பாரதிக்கான இன்றைய மதிப்பு’ என்றே தலைப்பிட்டிருந்தீர்கள். நான் இன்னும் இன்றைக்கான வாசிப்பு என்ற இடத்துக்கு வரவேயில்லை. அதற்குள் எப்படி கீழ்கண்ட வரியை எழுதுகிறீர்கள்?
//ஆக, கடைசியில் நாம் இன்னொரு பொதுவான புரிதலை அடைந்துவிட்டோம். உங்கள் அணுகுமுறை பின்நவீனத்துவ விமர்சனம் என்பதால் நீங்கள் பாரதியைத் தர அடிப்படையில் மகாகவி என வகைப்படுத்தவில்லை. என் விமர்சனம் முழுக்க அதைச் சார்ந்ததாகவே இருந்தது.//
நீங்கள் செய்வது textual criticism கணெக்கெடுப்பில்லை என்றால்  பாரதியை வரி வரியாய் வாசித்து நீங்கள் எழுதியது எங்கே? இன்னும் எழுதவில்லையென்றாலும் பாதகமில்லை. இப்பொழுதாவது எழுதிக்காட்டுங்கள்.
உங்களுக்கு பாரதியை வாசிக்கச் செவியில்லை என்றொரு விமர்சனத்தைச் சொன்னேன். அதற்கு உங்கள் பதில் என்ன? பாரதியை நீங்கள் செவிகொண்டு வாசித்தற்கான அத்தாட்சி எங்கே? 
 Diachronic, synchronic என்பதை உங்கள் வழமைப்படி இருமை என்று மட்டுமே புரிந்துகொண்டீர்கள். Synchronic perspective includes diachronic details. ‘இன்றைக்கு பாரதி’ என்பதில் இன்றைக்கு என்பதே synchronic perspectiveஐ சுட்டக்கூடியது. ‘இன்றைக்கு’ என்பதை நீங்கள் என்னவாக புரிந்துகொண்டீர்கள்?
ஒரு விவாதத்தை முன்னெடுத்துச் செல்லும்போது preempt பண்ணுவது, தர்க்கம் வளர்வதற்கு முன்பே foreclose பண்ணுவது முறையான வாதத்தை நடத்த உதவாது. 
அதிகப்படியான விபரங்களால் மூச்சு திணற அடிக்காமல், எல்லோருக்கும் புரியும்படி துல்லியமாக கேட்ட கேள்விகளுக்கு பதிலை எழுதுங்கள். 
நம் விவாதத்தை உங்கள் வாசகர்களே உண்மையாக வாசித்து வருகிறார்கள் என்பதை நீங்களும் அறிந்திருப்பீர்கள்.
நான் நீங்கள் பதிலெழுதும் நேரத்தில் எலியட்டும் பாரதியும் கட்டுரையை பதிவேற்றி விவாதத்தை தொடர்கிறேன்.