Thursday, November 10, 2011

அசின் என்றொரு பெண்பிம்பம்



அசின் பெண் பிம்பம்/திரை நட்சத்திரம்


திருச்சூர் வடக்கன்நாதசாமி கோவில் பிரகாரத்தில் பார்த்த பெண்ணின் குழிசடையையும், நெற்றி சந்தனக் கீற்றையும் நீக்கி, ஜீன்ஸ் மாட்டி நடக்கவிட்டது போல ‘சுட்டும் விழிச் சுடரே’ என்ற பாடலுக்கு ஒரு பெண்பிம்பம் தொலைக்காட்சியில் நடந்து போய்க்கொண்டிருக்க, அந்த பிம்ப உரிமையாளரின் பெயர் அசின் என்று பின்னால் அறிந்தேன். அந்தப் பாடலில் அசின் பெண் பிம்பத்தின் வசீகரத்தில் நிலை தடுமாறியது கொஞ்சமா நஞ்சமா!


ஜீன்சின் மேல் பட்டியில் கை விரல்களைச் சொருகிக்கொண்டு, கால் மாற்றி கால் மாற்றி, தொடைகள்  உராய அசின் பெண் பிம்பத்தின் நடை ஆணைச் சீண்டும் அழைப்பிதழ்; இளமை மட்டுமே அறியும் ஆனந்தத்தின், அதன் சுதந்திர உணர்வின் வெளிப்பாடு அது. ஷாம்பூ போட்டு பரத்திய கூந்தல் நடையின் லயத்திற்கு ஏற்ப மெலிதாகப் பறப்பது கூடுதல் அதிர்ஷ்டம்.

அசின் பெண்பிம்பத்தின் கண்களில் தெரியும் ஒளி உணர்வுக்கு ஏற்ப நிறம் ஏற்பதில்லை என்று எனக்கொரு புகார் உண்டு. கே.ஆர்.விஜயா, ஶ்ரீவித்யா, ரோஜா, ரம்யா கிருஷ்ணன், ஜோதிகா ,கோபிகா சாவ்லா, பிரியா மணி என்று பல பிற பெண் பிம்பங்களின் கோல விழிகளில் உணர்வு உடனே தொற்றி கடலாழம் காண்பிக்கும். அசின் பெண்பிம்பத்திலோ கண்களில் நீர் மல்கி சொட்டாமல் நிற்கும்போது கூட பிளந்த உதடுகளின் தாபமே தெரியும். சில்க் ஸ்மிதா பெண்பிம்பத்தின் கண்களில் தெரியும் தாபம் வெறுமையும் ஆழ்ந்த வெறுப்பும் கொண்டது; ஆண் தாபத்திற்கு ஒப்புக்கொடுத்ததன் தோல்வியை அறிவிப்பது. அது போன்ற தாப வெளிப்பாடு அல்ல அசின் பெண்பிம்பத்தின் கண்களில் தெரிவது. வாழ்க்கையின் துயரங்களை துயரங்களாக அனுபவத்தறியாத செல்லப்பிள்ளையின் கண்கள் அசின் பெண் பிம்பத்தின் கண்கள். அந்தக் கண்களே அசின் பிம்பத்தின் உடலசைவுகள் அனைத்தையும் கோலாகலமாய் மாற்றுகின்றன. உணர்வு தொற்றா கண்கள் அவை என்பதினால் அசின் பிம்பத்தை அம்பாளாகக் காண வேண்டிய துரதிருஷ்டம் நமக்கு நிகழாது என்று நான் ஆசுவாசமடைகிறேன். அழகிய பொம்மை உலா பொழுதுபோக்குக்கு உகந்ததுதானே.

கண்களின் உணர்வு தொற்றாதது நடிப்பின் குறைபாடு இல்லையா என்று ஒருவர் வினவலாம்தான். நிச்சயமாகக் குறைபாடுதான். நாடக இயக்குனரான என்னிடத்தில் அசின் பிம்பத்தைக் கொடுத்துவிடுங்கள் தட்டி கொட்டி சரி செய்து அனுப்புகிறேன் என்றுதான் சொல்லமுடியும்.


சாண்டில்யன் நாவல்களில் வரும் பெண்களின் பின்பாக வருணணைகள், எம்.ஜி.ஆர். பிம்பம் திரையில் கதாநாயகி பிம்பங்களைக் கட்டிப்பிடிக்கும் முறைகள் என்று கட்டமைக்கப்பட்டுள்ள தமிழ்த் திரைப்படப் பார்வையாளனின் இன்ப வரலாற்றில் பெண் பிம்பங்களின் பின்பாகங்கள் வகிக்கும் முக்கிய  இடம் நாம் அறிந்ததே. மறைமுகமாகவே முன்பு தமிழ்த் திரைப்படங்களில் அவைச் சுட்டப்பட்டன; நம் சம காலத்திய திரைப்படங்களிலோ பெண் பிம்பங்களின் பின்பாகங்களில் ஆண் பிம்பங்கள் தட்டுவது, தாளமிடுவது, பாக்கெட்டுகளில் கைவிடுவது, இறுக்கி பிடிப்பது போன்ற காட்சிகள் சர்வ சாதாரணமாய் இடம்பெறுகின்றன. பெண்பிம்பங்கள் தங்கள் பின்பாகங்களை உயர்த்தி தூக்கிக்கொண்டு பக்கவாட்டிலோ, பின்னோக்கியோ ஓடும் நடனக் காட்சிகளும் ஏராளம். அசின் பெண் பிம்பத்திற்கும் இந்தத் தமிழ் பண்பாட்டு முத்திரை வெளிப்பாடுகளிலிருந்து விதி விலக்கில்லை.
இவ்வாறாக அசின் பெண் பிம்பம் பங்கேற்கும் காட்சிகள் புகழ்பெற்றவை என்று அறிகிறேன். ‘ஐல ஐலசா ஆரியமாலா’ என்ற பாடல் காட்சியில் அசின் பெண்பிம்பத்தின் உடலசைவுகளில் மிருகதாபம் ஏறியிருந்தது. அந்தப் படத்தின் இயக்குனருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். ஏனெனில் அந்தப் பாடலைப் பார்த்த நான் உடனடியாக அசின் பெண் பிம்பக்கவர்ச்சியிலிருந்து விடுபட்டுவிட்டேன்.


இருந்தாலும் பழைய விசுவாசம் போகுமா என்ன? அசின் பெண் பிம்பம் கழுத்தெலும்பு தெரிய கன்னம் ஒட்டி, செயற்கையாய் சிரித்து சிரித்து அமீர் கானுடன் ஹிந்தி கஜினிக்காக தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்தபொது மனமுடைந்துவிட்டேன். உடனே வீட்டுக்கு அழைத்து புதிதாய் சமைந்த பெண்ணுக்கு நம்மூரில் கொடுப்பது போல உளுந்தங்களி கிண்டிப்போட வேண்டுமென்று தோன்றியது.




1 comment:

Rajan said...

ஐயன்மீர்! அருமையான பத்தி! என் ஐய்யப்பாட்டை நீக்கும் ஆழ்ந்த கருத்துகள்!

கொங்குதேர் வாழ்க்கை... அடடா அடடா!