Tuesday, October 30, 2012

பால் வேலரியின் கவிதை ‘அகம்’

பால் வேலரியின் கவிதை

பால் வேலரி 


'அகம்




தொங்கும் சங்கிலிகளின் எடை அழுந்தும்

ஒரு அடிமை, நீண்ட கண்களிளால்

என் தொட்டிகளில் தண்ணீர் மாற்றுகிறாள்

அருகாமையிலுள்ள கண்ணாடிகளில் தன்னைப் புதைகிறாள்

தன் தூய விரல்களினால் அந்தப் புதிர் படுக்கையில்

தாராளமாய் அளைகிறாள்

அந்த சுவர்களுக்கு மத்தியில் ஒரு பெண்ணை இருத்துகிறாள்

அந்தப் பெண்ணோ, என் பகற்கனவுகளில் கண்ணியமாய் சுற்றித் திரிந்து

என் கண நேர கண்ணோட்டத்தினூடே கடந்து செல்கிறாள்

- அதன் இன்மையை சிதைக்காமல் -

கண்ணாடி சூரிய வெளிச்சத்தினூடே கடந்து செல்வதைப் போல

பகுத்தறிவின் கருவிகளை சுதந்திரமாய் விட்டு விட்டு




குறிப்பு: சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் பால் வேலரியின் கட்டுரை ‘நடத்தலும் நடனமும்’ என்ற கட்டுரையை ‘அஸ்வமேதா’ சிற்றிதழுக்காக மொழிபெயர்த்திருக்கிறேன். அந்த மொழிபெயர்ப்போ, பத்திரிக்கையோ இப்போது என் கைவசம் இல்லை. காலத்தின் கைபிசகில் என் பழைய கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என் கோப்புகளில் சேகரமாகமல் போய்விட்டன. அதைப் பற்றி நான் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை என்றாலும் எனக்கு சில references தேவைப்படும்போது பழைய எழுத்துக்கள் இல்லையே என்ற வருத்தம் ஏற்படுகிறது. பால் வேலரியின் ‘நடத்தலும், நடனமும்’ கட்டுரையைப் படித்துவிட்டு இந்தக் கவிதையை வாசிப்பது நல்லது.

பால் வேலரியின் “அகம்” என்ற இந்தக் கவிதை (ஆங்கிலத் தலைப்பு “Interior”) சார்த்தரினால் அவருடைய புகழ்பெற்ற புத்தகமான What is Literature இல் ஆராயப்படுகிறது. கவிதையை விடுத்து உரைநடையை சார்த்தர் தன்னுடைய கடப்பாடுடைய இலக்கியத்திற்கு தெரிவு செய்வதற்கான காரணத்தை சொல்லும்போது கவிதை மொழியை உரைநடையிலிருந்து வேறுபடுத்த சார்த்தர் வேலரியின் இந்தக் கவிதையை வைத்து விளக்குவார்.

இந்தக் கவிதை   பகற்கனவின் உள்ளார்ந்த உலகத்திற்கும், வெளியுலகினை அவதானிப்பதற்கும், பகுத்தறிவதற்கும் உள்ள வேறுபாட்டினை வெளிப்படுத்துகிறது. பொருளாயப்படுத்தும் பார்வையிலிருந்து இந்தக் கவிதையில் வரும் பெண் தப்பிவிடுகிறாள்; இன்மையாக இருக்கிறாள்.

இன்மை/இருப்பு என்பதை இலக்கிய மொழி எவ்வாறு கையாள்கிறது என்பதைப் பற்றி போர்ஹெஸ்-மௌனி கட்டுரைத் தொடரில் இந்தக் கவிதையை குறித்து பேச வேண்டியிருக்கிறது. அதற்காக இருக்கட்டுமே என்று முன்கூட்டியே இந்தக் கவிதை மொழிபெயர்த்து வெளியிடுகிறேன்.

No comments: