Tuesday, November 6, 2012

ஜெயமோகனுக்கு மறுப்பும் கண்டனமும்

ஜெயமோகன் தன்னுடைய எஸ்.வி.ராஜதுரை வழக்கு என்ற இன்றைய பதிவில் நான் ‘இந்தியா ஒரு தேசமே அல்ல’ என்ற வகையில் கருத்து சொன்னதாகவும் அதைத் தொடர்ந்தே அன்னிய நிதி பற்றிய விவாதம் எழுந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

‘இந்தியா ஒரு தேசமே அல்ல’ என்ற வகையில் நான் என்றுமே கருத்து சொன்னதில்லை. அப்படி நான் சொன்னதாக ஜெயமோகன் எழுதுவது சுத்தப் பொய்.

ஃபோர்ட் ஃபவுண்டேஷன் தவறான நிறுவனம் அல்ல என்பதை அவர்கள் நிதியுதவி அளித்திருக்கும் பண்பாட்டு இலக்கிய திட்டங்களைச் சுட்டிக்காட்டி அவற்றில் என்ன பிழை காணமுடியும் என்று கேட்டிருக்கிறேன். மேலும் நான் சொன்ன தகவல்கள் எல்லாமே பொது வெளியில் வலைத்தளங்களில் எல்லோரும் படிக்கக்கூடிய தகவல்களே. இந்திய தேச ஒருமைப்பாட்டினை பேணுவதே ஃபோர்ட் போன்ற நிதியுதவி நிறுவனங்களின் நோக்கமாக இருக்க முடியும் என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

இந்தியாவில் செயல்படும் அத்தனை நிதியுதவி செய்யும் நிறுவனங்களும், பெறும் நிறுவனங்களும் அரசின் சட்டங்களுக்கும் கண்காணிப்பிற்கும் உட்பட்ட சட்டபூர்வமான நிறுவனங்களே. அவற்றில் வேலை பார்ப்பதே குற்றம் என்பதாக ஜெயமோகன் எழுதியதாய் அவரின் சிஷ்ய நண்பர்கள்  புரிந்து கொண்டு டிவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் என்னை அவமதித்ததும், எள்ளி நகையாடியதும் எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. இவை எல்லாவற்றையும் நான் முறையாக சேகரம் செய்து வைத்திருக்கிறேன்.

நான் வேலை பார்த்த/ பார்க்கும் நிறுவனங்களின் நிதியாதாரத்தை சார்ந்தே என்னுடைய கருத்துக்கள் இருக்கின்றன என்று ஜெயமோகன் எழுதுவது வசை. சிந்தனைத் துறையில் செயல்படும் எவரைப் பற்றியும் இந்த வசையினால் தாக்கி அவர்கள் சொல்லும் கருத்துக்களின் உண்மையை அறியவிடாமல்  திசை திருப்பி விடலாம். இதைத்தான் ஜெயமோகன் செய்து வருகிறார்.

ஜெயமோகனின் பொய்க்கும் வசைக்கும் என்னுடைய மறுப்பினையும் கடும் கண்டனத்தையும் இங்கே பதிவு செய்கிறேன்.

நித்ய சைதன்ய யதியையும் நாராயண குருவையும் தன் குருக்களாக சொல்லிக்கொள்ளும் ஜெயமோகன் பொய்களையும் வசைகளையும் எழுதுவது தன் குருக்களை அவமானப்படுத்துமே என்று அக்கறை கொள்ளவேண்டும்.  ஏனெனில் நிதியாதாரங்களால் அல்ல குருக்களின் ஆசீர்வாதத்தினாலே கருத்துக்கள் தோற்றம் பெறுகின்றன. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கார் ஆகியோரை பேராசான்களாகக் கருதி தங்கள் வாழ்வு நெறி முறையை அமைத்துக்கொண்ட கோடிக்கணக்கானோர் இந்தியதேசத்தில் இருக்கிறார்கள். ஜெயமோகன் தந்தை பெரியாரைப் பற்றியும், அண்ணல் அம்பேத்கார் பற்றியும் எழுதி வரும் கருத்துக்கள் அவருடைய குருக்களுக்கு பெருமை சேர்க்குமா என்றும் ஜெயமோகன் ஆன்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 

தீபாவளிக்கு தீபாவளி இப்படியொரு தலைவலி.

No comments: