Monday, January 13, 2014

அழாதே மச்சக்கன்னி! | நாவல் | அத்தியாயம் 1

Reference photo of a musician playing Gayageum. Thanks to http://en.wikipedia.org/wiki/Gayageum  Disclaimer:படம் நாவலின் இந்த அத்தியாயத்தில்  குறிப்பிடப்படும் 'காயாக்வம்' என்ற இசைக்கருவி எது என காண்பிப்பதற்கு மட்டுமே மேற்கண்ட விக்கிப்பீடியா புகைப்படம் தரப்பட்டுள்ளது. மற்றபடி புகைப்படத்திற்கும் நாவலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை  
------------------------------------------------------------------------------------------------------------

பட்டுச் சிட்டு பாடியதாவது:

கிம் கி வோன்! என்ன செய்கிறாய் அவளை! பதினேழாவது குப்பி வோட்காவில் நீ நிலை தடுமாறிவிட்டாயா? அல்லது பூரண சந்திரனின் கிரணங்கள் உன் மனதினை சிதைத்துவிட்டனவா? கொண்டையாட்டி குருவி போல அவள் தன் வாரி முடிந்த கூந்தலில் செருகிய மரச் சீப்பினை சிலுப்பிக்கொண்டு தன் நீல நிறப் பாவாடையை தன் நுனி விரல்களால் பிடித்துக்கொண்டு மிதந்து பறந்து ஓடியது உண்மைதான் எனினும் உண்மைதான் எனினும் அவளைத் துரத்திப் பிடித்தது சரியல்ல கிம் கி வோன். உன் மூர்க்கப் பிடியினால் அவளுடைய நீலப்பாவாடை கிழிந்து அவளுடைய பிஞ்சு வெண் பின்னந்தொடைகள் வெளித்தெரிகின்றன. அவளுடைய குறு முலைகள் விம்முகின்றன; அவள் கழுத்தில் ஓடும் பச்சை நரம்பு துடிக்கிறது; அவள் அந்த இந்தியனிடம் பரிசாகப் பெற்ற கைமுகக் கண்ணாடி அவள் இடுப்புக் கச்சையிலிருந்து நழுவி விழுந்து தான் காட்டுவது எது என்று தெரியாமல் திகைத்துக் கீழே கிடக்கிறது

அவள் தன் வலது கையால் தன் கூந்தலில் செருகியிருக்கும் மரச்சீப்பினை விரைந்து எடுக்க பட்டுத் துணியெனவே அவிழ்ந்து சரிகிறது அவள் கூந்தல். திருத்தப்பட்டு வரையப்பட்ட புருவங்களுக்குக் கீழே அடி பட்ட நாகமென மின்னுகின்றன அவள் கண்கள். ஜாக்கிரதை கிம் கி வோன்அந்த மரச்சீப்பின் பற்கள் ஓவ்வொன்றும் கூரிய அம்பினைப் போன்றது. மொத்தம் பதினேழு பற்கள். நீ கவிழ்த்த ஒவ்வொரு குப்பி வோட்காவுக்கும் ஒரு பல் என உன் குரல்வளையில் குருதி குமிழியிட இறங்கும் அந்த சீப்பு

கிம், கிம், கிம்கி வோன், ஏனிப்படி ஆகிவிட்டாய் நீ? அவளுடைய அவிழ்ந்த கூந்தலும், மென் முலைகளும் உன்னை ஏன் இப்படி உன்மத்தமடையச் செய்கின்றன? ஜிண்டோ தீவின் ரோஜா நிற வோட்காவின் மேல் பழியைப் போடாதே; ஜிண்டோவின் புகழ் பெற்ற மதுவல்லவா அது? ஜிண்டோவின் சகதிக்கடற்கரை பீப்பாய் பீப்பாயாய் ரோஜா நிற வோட்காவைக் கண்டிருக்கிறது. எண்ணற்ற கொரிய தசைநார்களை அது வலுப்படுத்தியிருக்கிறது. 

யுங் மின் நீ ஜிண்டோவின் நாய்களை அழைத்தது தப்புதான். கிம் கி வோன் உன்னைத் துரத்தி துரத்தி ஓடி வந்தபோது அவன் வாயில் வழிந்த எச்சிலை கண்டு ஏன் பயந்தாய் நீ? அந்த இந்தியன் தந்த முகக்கண்ணாடியை எடுத்து அவன் முகத்திற்கு நேராக நீட்டியிருக்க வேண்டும் நீ. தன் எச்சில் வழியும் மோவாயையும் போதையில் சிவந்த இல்லிக்கண்களையும் காமத்தில் துடிக்கும் கன்னக்கதுப்புகளையும் கண்டு பதறி நானா இவன் நானா இவன் என்று கிம் கி வோன் தெளிந்திருப்பான்; அவன் ஒரு கவி என அறியாதவளா நீ. 

“மீட்டலுக்கு காத்திருக்கும் கயாக்வம்,
 கடற்பாசி மணக்கும் உன் கழுத்தின் பச்சை நரம்பு” 

என்ற கிம் கி வோனின் கவிதை வரியை எப்படி மறக்கலாம் நீ? உன் மென் கழுத்தின் நரம்பினை கயாக்வத்தின் பட்டு நூலுடன் ஒப்பிட்ட கின் கி வோனா உன் நீலப்பாவாடையை வேண்டுமென்றே கிழித்திருப்பான்? நினைத்துப்பார் யுங் மின் நீ நேற்றிரவு கயாக்வம் வாசிக்க மேடையில் அமர்ந்திருந்தாய். உன் செந்நிற நீள்பாவாடை மூடிய தாமரை மொட்டென உன்னைச் சூழ்ந்திருக்க அந்த மொட்டில் முகிழ்த்த வெண் தேவதையென நீ நடுவில் இருந்தாய். அரங்கத்தின் முன் வரிசையில் கிம் கி வோனும் அந்த இந்தியனும் அமர்ந்திருந்தனர். இந்தியனின் உதடுகளில் நெளிந்த அந்த துஷ்டச் சிரிப்பினை நீ கண்டுகொண்டாய். அந்த சிரிப்பு ஒரு அழைப்பு, உன் இதயத்தின் ரகசியங்களை மொழி தாண்டி, கடல் தாண்டி, நான் அறிவேன் எனச் சொல்லும் சிரிப்பு. பெண்ணே யுங் மின்! உன் அதிகாலைக் கனவுகளை கறுப்பு சதையின் வசீகரம் ஆக்கிரமித்திருப்பதை எப்படி அறிவான் இந்த இந்தியன்? அவன் உனக்கு பரிசளிக்கப் போகும் கைமுகக்கண்ணாடியை பரிசுப் பொதியில் உள்வைப்பதற்கு முன் அதை எடுத்து கிம் கி வோனிடம் காட்டினான் இல்லையா அதே கணத்தில்தான் உன் ஓரக்கண் பார்வையை அந்தக் கண்ணாடி வழியே சந்தித்தான். நாடகீய கவிகளைப் போல எல்லாவற்றையும் பெரிதுபடுத்திக் காட்டும் கண்ணாடி அல்லவா அது? யுங் மின் உனக்கு எப்படி தெரிந்தது அவன் உன் கண்களை கண்ணாடி வழி சந்தித்தான் என்று? அப்படித் தெரிந்ததால்தானே உன் கால்கள் நீ அது வரை அறியாத பலகீனத்தில் துவண்டன; உன் கைகள் தளர்ந்து கயாக்வத்தின் பட்டு நூல் நரம்புகளில் விழ லயமற்று அதிர்ந்தது கயாக்வம். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

கண்ணே யுங் மின் அதிர்ந்த கயாக்வம் அந்தரத்தில் காற்றில் ஏறி மிதந்த அதிசயத்தை  அந்த கறுப்பு இந்தியனின் அகண்ட விழிகள் உன் கண்களைச் சந்தித்த தருணம் என்று நினைக்கிறாயே அது தவறு. கை முகக்கண்ணாடியில் உன் ஓரக்கண் பார்வையினை இகழ்ச்சியின் முறுவலோடு எதிர்கொண்டானே அந்தக் கறுப்பன் அதை கிம் கி வோன் பார்த்ததால் நிகழ்ந்தது அந்த அதிசயம். காற்றில் காமத்தின் வெப்பம் ஏறியிருக்கிறது என்று அவன் மனதினுள் முனகியதை இன்னும் கரையேறாத ஆத்மாக்கள் கேட்டுவிட்டன. கரையேறாத ஆத்மாக்களின் காமத்திற்கு ஏங்கிய பெருமூச்சல்லவா காற்றில் மிதந்த கயாக்வத்தின் அதிர்வு?

நேற்றே கைமுகக்கண்ணாடியினை பரிசாகப் பெற்றிருக்க வேண்டும் நீ. நிகழ்ச்சி முடிந்தபின் கிம் கி வோனும் கறுப்பனும் உன்னை சந்திக்க மேடைக்கு பின்புறம் வந்தார்களே அப்போதே நீ அவனுடைய பரிசினை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். ஏன் நாளை வா என்று சொல்லி அனுப்பினாய்? அவன் இரவு முழுவதும் கைமுகக்கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து உன் முகத்தை கற்பிதம் செய்துகொள்ளட்டும் என்றுதானே? கிம் கி வோன் நேற்றிரவெல்லாம் எப்படித் துடித்தான் தெரியுமா? கறுப்பனின் உதடுகள் உன் மெலிந்த கழுத்து எலும்புகளில் தாபத்துடன் அலைந்து அலைந்து சிறு சிறு பற்கடிப்புகளோடு முத்தமிடுவதாக அவன் கற்பனை செய்தான். அவனுடைய அறையில் வோட்கா தேடி இல்லாததால் ஏமாந்து அரிசிக்கள்ளை போத்தல் ஒன்றினை  அப்படியே வாயில் கவிழ்த்தான். அவன் உன்னை இன்று துரத்தியபோது அவன் வாயில் வழிந்தது எச்சிலல்ல அரிசிக்கள்.

கறுப்பு இந்தியன் இன்று உனக்கு பரிசளிப்பதற்கு வந்தபோது அவன் ஏன் கிம் கி வோனை தன்னுடன் கூட்டிவரவில்லை என்று கேட்டாயா? நீ ஏன் கேட்கப்போகிறாய். அதிசயம் அளித்த புகழ், கரையேறாத ஆத்மாக்களின் தொடர்பு, மினுமினுக்கும் கறுப்பு சதையின் கவர்ச்சி என்று மயங்கிக் கிடந்தாய். 

கிம் கி வோன் நீ கனவில் கண்ட காட்சியினை அப்படியே செயல்படுத்துகிறாயே, நாய்களோடு நாயாகிவிட்டாயா நீ? யுங் மின்னின் வெள்ளை ரவிக்கையை கிழித்து அவளின் கழுத்தெழும்புகளில் சிறு பற்கடிப்புகளோடு முத்தமிடுகிறாய். கிம் கி வோன் நிறுத்திவிடு உடனடியாக நிறுத்திவிடு. அலைகளற்று இருக்கிறது ஜிண்டோவின் கடற்கரை. அதன் சாம்பல் நிற சகதியில் ஆங்காங்கே பட்டுத் தெறிக்கிறது தூரத்து வெளிச்சம். எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறது கை முகக்கண்ணாடி. பூரணச் சந்திரனின் ஒளியில் வெளிறி நீண்டிருக்கிறது கடற்கரை. ஓ நாய்களை மறந்துவிட்டேனே யுங் மின் அழைத்த நாய்கள் அனைத்தும், ஆம் அவற்றை எண்ணிவிட்டேன், சரியாக பதினோரு நாய்கள் உங்களைச் சுற்றி நிற்கின்றன. நிறுத்திவிடு கிம் நிறுத்திவிடு. கரையேறாத ஆத்மாக்களின் கூட்டத்தில் சேர்ந்துவிடாதே. உன் பாவத்திற்கான வரிகளை என்னை இறந்தோர் பாடலில் இசைக்க வைத்துவிடாதே.  நாளை அதிகாலையில் வானில் வட்டமிடும் செம்போத்துகள் கிம் கி வோனின் பாவங்களை சொல்லி உம் கொட்டி பறக்கச் செய்துவிடாதே. எப்படித் துடிக்கிறாள் பார் யுங் மின். அவள் உன்னிடமிருந்து தப்பிக்க சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சி போல துடிப்பதை பார். கரையேறாத ஆத்மாக்களின் முன் நிகழ்த்த வேண்டிய அவல நாடகமா இது? 

யாரங்கே, யாரது அங்கே பட்டுச்சிட்டு வார்த்தைகளின் அழகுக்கு நிகழ்வின் உண்மையினைக் காவு கொடுப்பவள் என்று சொல்லியது? கரையேறாத ஆத்மாக்களின் கூட்டத்தினை நான் பார்க்கவில்லை, கேட்கவில்லை என்றா நினைக்கிறீர்கள். ஜிண்டோவின் நாய்களை விட நான் உங்களை நன்றாகவேப் பார்க்கிறேன் நன்றாகவே கேட்கிறேன். 

யுங் மின் தன் தலையில் செருகியிருந்த சீப்பினை எடுப்பது கண்டு நாய்கள் குரைக்கின்றன. அமானுஷ்யமான குரைப்பு அது, வரப்போவதை அறிவிக்கும் குரைப்பு அது. போதையில் உனக்கு எதுவும் கேட்கவில்லையா கிம் என்ன வகையான போதை இது? எத்தனை தடவை யுங் மின்னின் மென்மையை நினைத்து ஏங்கியிருக்கிறாய். நாய்கள் ஏன் உன் மேல் பாயாமல் ஏதோ மந்திர வளையத்திற்கு அப்பால் நிற்பவை போலவே நிற்கின்றன. கரையேறாத ஆத்மாக்களுக்கு இந்த வன் கொடுமையை பார்ப்பதிலுள்ள ஆர்வமா. யாரிந்த உதவிக்கு வந்த நாய்களின் கண்களைக் கட்டியது? 

நாய்கள் மேற்நோக்கி ஊளையிடுகின்றன; முன் கால்களைத் தூக்கி தூக்கி கண்ணுக்குப் புலப்படாத சுவரைப் பிராண்டுகின்றன. நட்சத்திரங்கள் கவலையற்று மினுங்குகின்றன. நிலவொளிக்குத் தெரியுமா வன்கொடுமைக்கும் இசை நிகழ்ச்சிக்கும் உள்ள வித்தியாசம்?

வேண்டாம் கிம் கி வோன் அவளுடைய நீலப்பாவாடையை கிழிப்பதை நிறுத்து. யுங் மின்னின் கைகளை இறுக்கிப்பிடித்து சகதியில் அமுக்குகிறானே இந்தக் கிராதகன், கேட்பாரில்லையா. 

அதோ தன் பதினேழு பற்கள் கொண்ட மரச்சீப்பினை ஓங்கிவிட்டாள் யுங் மின். 


No comments: