Tuesday, September 2, 2014

உலகு எனும் உச்சரிப்பு

ஃப்ரெஞ்சு கவி பாதலேருக்கு (Baudelaire) பிரபஞ்சமே மொழியாகத்தான் எப்போதும் தெரியும்; பருப்பொருளாக அல்ல. உதாரணமாக ‘கடவுள் உலகை படைத்தார்’ என்று பாதலேர் எழுதமாட்டார். ‘கடவுள் உலகை உச்சரித்தார்’ என்றுதான் அவர் எழுதுவார். இந்த கருத்து ஒன்றும் புதிதல்ல என்றாலும் பாதலேரிடம் அது பெருகின்ற முக்கியத்துவம் அபாரமானது. வாக்னரின் இசை பற்றி பாதலேர் எழுதியிருக்கிற கட்டுரையில் உண்மையான இசை அதற்கு ஒத்திசைவு காட்டுகிற மனங்களில் இசைக்கு இணையான எண்ணங்களை உருவாக்குகிறது. சப்தங்கள் நிறங்களையும், நிறங்கள் ராகங்களையும், நிறங்களும் ராகங்களும் கருத்துக்களையும் ஒன்றன் ஒப்புமை மற்றொன்றாகத் தோற்றுவிக்கின்றன. பொருள்கள் தங்களை எப்போதுமே ஒன்றன் ஒப்புமையில் விளைந்த மற்றொன்றாகவே வெளிப்படுத்துகின்றன. ஏனென்றால் கடவுள்   உச்சரித்த உலகு பிரிக்க முடியாத சிக்கலான முழுமை கொண்டது. மலை என்பது ஒரு வார்த்தை, நதி என்பது மற்றொன்று, நிலப்பகுதி என்பது ஒரு வாக்கியம். எல்லா வாக்கியங்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன. பிரபஞ்சத் தொடர்பு என்பது தொடர்ந்த உருமாற்றமே. பிரதியாகிய உலகு ஒன்றல்ல பலது; அதன் ஒவ்வொரு பக்கமும் இன்னொரு பக்கத்தின்  உருமாற்றமே என முடிவற்று நீள்வது. உலகு என்பது உருவகத்தின் உருவகம். உலகு இவ்வாறாக அதன் யதார்த்தத்தை இழந்து பேச்சின் வகைமையாகிறது. இந்த ஒப்புமைகளின் தொடர்ச்சியில் அதன் இருதயத்தில் வீற்றிருப்பது இன்மை. பிரதிகளின் பல வடிவங்கள் மூலப் பிரதி என்று ஏதுமில்லை என்று சொல்கின்றன. அதன் மூல இன்மையில் (emptiness) உலகின் யதார்த்தமும்,மொழியின் அர்த்தங்களும் தலைகுப்புற விழுந்து, காணாமல் போகின்றன. 

ஆனால் பாதலேர் அல்ல கவி மல்லார்மேதான் (Mallarme) இன்மையினை உற்று நோக்கி அந்த சிந்தனையை கவிதையின் உள்ளீடாக மாற்றியவர். 


மேலுள்ள குறிப்பு -ஆக்டேவியா பாஸ் எழுதிய “Children of the mire: Modern Poetry from Romanticism to the Avant-Garde” (Translated by Rachel Phillips) Published by Harvard University Press 1991 புத்தகத்தில் பக்கம் 71-இன் சுதந்திர மொழிபெயர்ப்பு.

No comments: