Wednesday, April 15, 2015

எனக்குப் பிடித்த நூறு நாவல்கள் 13- கோ யுன் (Ko Un) Little Pilgrim

"Avatamsaka Gandavyuha Teaching 1" by Asia Society created the file. Artwork created by an anonymous ancient source. - http://asiasocietymuseum.org/region_object.asp?RegionID=1&CountryID=2&ChapterID=10&ObjectID=558. Licensed under Public Domain via Wikimedia Commons - http://commons.wikimedia.org/wiki/File:Avatamsaka_Gandavyuha_Teaching_1.jpeg#/media/File:Avatamsaka_Gandavyuha_Teaching_1.jpeg

"Cover of Ko Un's Little Pilgrim" by Source (WP:NFCC#4). Licensed under Fair use via Wikipedia - http://en.wikipedia.org/wiki/File:Cover_of_Ko_Un%27s_Little_Pilgrim.jpg#/media/File:Cover_of_Ko_Un%27s_Little_Pilgrim.jpg

கோ யுன் கொரிய நாட்டின் முது பெரும் கவி. 1933 ஆம் ஆண்டு கோ யுன் பிறந்தபோது கொரியா ஜப்பானிய காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. கொரிய மொழியில் பேசுவது எழுதுவது படிப்பது தடை செய்யப்பட்டிருந்தது. போதுமான ஊட்டச்சத்து இன்றி வளர்ந்த கோ யுன், போதுமான உடல் வலுவைப் பெறவில்லை ஆதலால் அவரை ராணுவத்தில் சேர்க்கவில்லை. ஆனாலும் ஜப்பானுக்கும் கொரியாவுக்கும் தொடர்ந்து நடந்த போர்களைப் பார்க்கும் கொடுமையிலிருந்து அவர் தப்பிக்கவில்லை. 1952 ஆம் ஆண்டு  கோ யுன் ஜென் புத்த மடாலாயத்தில் சேர்ந்து புத்த பிக்குவானார்.  பத்தாண்டு கால புத்த மடாலய வாழ்க்கைக்குப் பின், கோ யுன் மடாலயம் சுய நலங்களை வளர்ப்பதாகக்கூறி அதிலிருந்து வெளியேறினார். இருமுறை தற்கொலைக்கு முயன்று தோற்றுப்போன கோ யுன் 1970 களில் கொரிய ஜனநாயக விடுதலை இயக்கத்தில் பங்கேற்றதால் சிறையிலடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டார். சிறை வாழ்க்கையின்போது தான் வாழ்க்கையில் சந்தித்த ஒவ்வொரு நபரையும் பற்றி ஒரு கவிதை எழுதுவது என்று ஆரம்பித்து சிறைலிருந்து வெளிவந்தும் பல ஆண்டுகள் தொடர்ந்து எழுதினார். Ten Thousand Lives என்று தலைப்பிடப்பட்ட அந்தக் கவிதைத் தொகுதி உண்மையில் பத்தாயிரம் நபர்களைப் பற்றியது. 

    போரின் கொடுமைகளை நேரில் பார்த்திருந்தாலும், கொடுமையான வன் கொடுமைகளுக்கு ஆளானவராக இருந்தாலும், பௌத்த மடலாயங்களின் மேல் நம்பிக்கை இழந்தவராக மாறினாலும் கோ யுன் பௌத்தத்தில் நம்பிக்கை இழக்கவில்லை அது தருகின்ற வாழ்க்கையை அறுதி செய்யும் ஒளியினையும் இழக்கவில்லை. அவருடைய கவிதைகளில் எதிர்மறையின் கீற்றினை கிஞ்சித்தும் காண இயலவில்லை. ‘பத்தாயிரம் வாழ்க்கைகள்’ கொரிய வாழ்க்கையின், சரித்திரத்தின், இணையற்ற ஆவணமாகவும், கொரிய நாட்டின் போராட்டங்களில் இருந்து முகிழ்த்த கவித்துவ உச்சமாகவும் கருதப்படுகிறது.  ஆலென் கின்ஸ்பெர்க், கோ யுன் பௌத்த மத விற்பன்னர், மகா கவி, அரசியல் விடுதலைக்கான போராளி, இயற்கையின் சரித்திரத்தை எழுதிய ஆசான் என்று குறிப்பிட்டார். கோ யுன் தன் அரை நூற்றாண்டுக்கும் மேலான இயக்கத்தில் ஏராளமாக படைத்திருக்கிறார். அவருடைய படைப்புலகத்தின் சிறு பகுதியே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கோ யுன் கொரிய கிராமம் ஒன்றில் தன் மனைவியுடன் தற்போது வாழ்ந்து வருகிறார். இரு முறை அவர் பெயர் இலக்கியத்திற்கான நோபெல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

    நான் கோ யுன்னின் நாவல் Little Pilgrim ஐ கொரியாவில் பயணம் செய்யும்போது வாசித்தேன். நான் எழுதிக்கொண்டிருக்கும் ‘அழாதே மச்சக்கன்னி’ நாவல் கொரியாவில் நிகழ்வதால் கொரிய மொழிப் படங்கள், சுற்றுலாத் தலங்கள், கலைப் பொருட்கள் ஆகியவற்றை படிப்பதோடு கொரிய கவிதைகளையும் நாவல்களையும் படிப்பதை வழக்கமாக்கிக்கொண்டேன். ‘லிட்டில் பில்கிரிம்’ கொரிய மக்களின் ஆன்மீக மையத்தினை அடையாளம் காண எனக்கு உதவியது.

    ‘லிட்டில் பில்கிரிமின்’ கதை இந்தியாவில் கௌதம புத்தரின் காலத்தில் நிகழ்கிறது.  கௌதம புத்தர் நாவலில் எந்த இடத்திலும் கதாபாத்திரமாக நேரடியாக வருவதில்லை. நாவல் கொரிய மகாயான பௌத்தத்தின் அடிப்படை நூலான அவதாம்சக சூத்திரத்தை அடியொற்றி எழுதப்பட்டிருக்கிறது. இந்தியாவிலிருந்து கொரியாவுக்கு மொழிபெயர்ப்பில் சென்ற அவதாம்சக சூத்திரம் கொரிய மொழியில் Daebanggwang Bulhwaeom Gyeong or Hwaeom Gyeong என்று அழைக்கப்படுகிறது. அவதாம்சக சூத்திரம் கௌதம புத்தரின் இறப்புக்கு ஐநூறு ஆண்டுகளுக்குப் பின் எழுதப்பட்டது. ஆறாம் நூற்றாண்டு உஜ்ஜயினியைச் சேர்ந்த புத்த துறவியான பராமார்த்தர் அவதாம்சக சூத்திரம் ‘போதிசத்துவ பீடிகை’ என்ற பெயரிலும் வழங்கப்பட்டதாகச் சொல்கிறார். அவதாம்சக சூத்திரம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுள்ளது. பார்க்க:  The Flower Ornament Scripture : A Translation of the Avatamsaka Sūtra (1993) by Thomas Cleary, ISBN 0-87773-940-4 இந்தியாவிலிருந்து கொரியாவுக்கு அவதாம்சக சூத்திரம் சீன மொழிபெயர்ப்புகளின் வழி சென்றடைந்துள்ளது.

    உபநிடதங்களில் வரும் நசிகேதன் பிராஜபதியுடன் உரையாடி ஞானம் பெறுவது போல லிட்டில் பில்கிரிமில் வரும்  சுதானன் பல ஆண் பெண் துறவிகளையும், மிருகங்களையும், பறவைகளையும், தாவரங்களையும் சந்தித்து ஞானம் பெறுகிறான். கோ யுன் அவதாமசக சூத்திரத்தின் பத்து படி பாதையை அப்படியே நாவலின் உள்க்கட்டமைப்பாக வைத்திருக்கிறார். மொத்தம் 53 உரையாடல்கள். தெரியாத அதிசயத்தை தெரிந்த வடிவத்தை வைத்து விளக்கும் தவறினை செய்யும்  மேற்கத்திய விமர்சகர்கள் லிட்டில் பில்கிரிம் நாவலை தாந்தேயின் டிவைன் காமெடியோடு ஒப்பிடத்தலைப்படுகிறார்கள். ஆனால் ‘லிட்டில் பில்கிரிம்’ மேற்கத்திய மரபின் அர்த்தத்தில் வடிவமுடைய  காப்பியநாவல் அல்ல; இந்திய தத்துவங்களின் கதைகூறலுக்கு அணுக்கமான கதை சொல்லலைக் கொண்ட

    ‘லிட்டில் பில்கிரிம்’  சுதானனுக்கு வயது ஏறுவதே இல்லை நாவலில் காலம் கழிந்தாலும் அவன் சிறுவனாகவே இருக்கிறான். போரில் நாவலின் ஆசிரியர் கோ யுன்னைப் போலவே குடும்பத்தை இழந்த அனாதை சுதானனின் சந்திப்புகள் பத்துபடிப் பாதை வழியே மெதுவாக பூரணவிழிப்பினை நோக்கி நகர்வதாகத் தோன்றினாலும் அவனுக்கு அதி விழிப்பு சடாரென்றே நிகழ்கிறது; சுதானன் அவனைப் போலவே போரில் குடும்பத்தை இழந்த இன்னொரு சிறுவனை சந்திக்கும்போது சாவினைக் கடந்த சுழற்சி உறுதிப்படுகிறது.

    கோ யுன் ‘லிட்டில் பில்கிரிம்’ நாவலை இருபத்தி இரண்டு வருடங்களில் எழுதி முடித்தார். நாவலின்  முதல் பகுதி  கவித்துவமாகவும், நடுப்பகுதி சமூக பிரச்சினைகள் நிரம்பியதாகவும் மூன்றாம் இறுதிப்பகுதி தத்துவார்த்தமாகவும் இருக்கிறது. எனக்குப் பிடித்த பகுதிகள் நாவலின் ஆரம்ப பகுதிகளே.

லிட்டில் பில்கிரிம் இவ்வாறாக ஆரம்பிக்கிறது:

“The river was beginning to loom into view beyond a cluster of hybiscus trees hanging as if in a drunken stupor. It flowed quickly in the early morning light the sound of its rippling subdued . For little Sudhana, that glimpse of the the river constituted the first awareness of the world as he regained consciousness.
    “He’s alive!” Manjushri rejoiced. The oldman rescued the child evening before, as the boy floated close to the riverbank. All night long, the aged Manjushri had kept watch beside him on the sandy shore of the vast triangular reach where the Son River united with a small tributary before flowing down to join the Gaṅgā.

    They were in the northern regions of what is now called India. All the nation’s frontier’s and fortresses were in a state of unprecedented alert. King Virudhaka had determined to wipe the entire Shakya clan of Kapilavastu  from the face of the Earth. …….”


“லிட்டில் பில்கிரிம்” தமிழில் மொழிபெயர்க்கப்பட்டால் அது சிறுவர்களுக்கான மிகச் சிறந்த நாவலாகவும் இருக்கும்.

    http://www.amazon.com/Little-Pilgrim-Novel-Ko-Un/dp/1888375434

No comments: