Saturday, April 11, 2015

எனக்குப் பிடித்த நூறு நாவல்கள் 9 - இடாலோ கால்வினோ (Italo Calvino) "Invisible Cities"

"InvisibleCities" by Source. Licensed under Fair use via Wikipedia - http://en.wikipedia.org/wiki/File:InvisibleCities.jpg#/media/File:InvisibleCities.jpg

எனக்குப் பிடித்த நூறு நாவல்கள் 9 - இடாலோ கால்வினோ (Italo Calvino) “Invisible Cities”

    இடாலோ கால்வினோவின் Invisible Cities தமிழில் ஏற்கனவே மொழிபெயர்ப்பாகிவிட்டதா என்று தெரியவில்லை. “If on a winter's night a traveller” நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்படுள்ளது. அந்த மொழிபெயர்ப்பை ஐந்தாறு பக்கங்கள் படித்தவுடனேயே மூடி வைத்துவிட்டேன். Invisible Cities தமிழில் மொழிபெயர்க்கப்படுமானால் அதற்கு ஒரு சீரும் சிறப்புமான நல்ல வாழ்க்கை அமைய அதன் மொழிபெயர்ப்பாளர் மெனெக்கெட வேண்டும்.

    ஏனெனில் கால்வினோவின் Invisible Cities மரபான அர்த்தத்தில் நாவல் இல்லை; இதில் கதையென்று ஏதும் சொல்லப்படுவதில்லை. சீனாவின் பேரரசரான குப்ளாய் கான் தனது விரியும் சாம்ராஜ்யத்தினை அறிந்துகொள்ள வேண்டி புகழ்பெற்ற பயணியான மார்கோ போலோவை அனுப்பி வைக்கிறார். மார்கோ பொலோ திரும்பி வந்து குப்ளாய் கானிடம் ஐம்பத்தைந்து நகரங்களைப் பற்றிய விவரணைகளைச் சொல்கிறார். மார்கோ போலோ பேசுவது ஒரு மொழி குப்ளாய் கான் புழங்குவது இன்னொரு மொழி இரண்டு பேரும் உரையாடுகிறார்கள். கற்பனையை ஊடகமாக வைத்து ‘மொழிபெயர்த்து’ இருவரும் புரிந்துகொள்கிறார்கள். ஆக, கற்பனையும் கற்பனையின் சாத்தியங்கள் மட்டுமே இந்நாவலின் கரு.

    நாவலில் வரும் அத்தனை நகரங்களும் பெண் பெயர்கள் கொண்டவை, அந்தப் பெண்களோடு கொள்ளும் ‘உறவுகளின்’ அடிப்படையில் பதினோரு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. நகரங்களும் நினைவுகளும், நகரங்களும் ஆசையும், நகரங்களும் குறிகளும் (மக்களே! இங்கே குறிகள் என்பது signs என்ற ஆங்கில் வார்த்தையின் தமிழாக்கம்), ஒல்லியான நகரங்கள், வியாபார நகரங்கள், நகரங்களும் கண்களும், நகரங்களும் கண்களும், நகரங்களும் பெயர்களும், நகரங்களும் வானமும், நகரங்களும் இறந்தவர்களும், தொடர்ந்த நகரங்கள், மறைந்திருக்கும் நகரங்கள் ஆகியன பிரிவினைகள். 

    கால்வினோவின் மூல இத்தாலிய நாவல் 1972 இல் வெளிவந்தது அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு 1975இல் வந்தது. க்ரியா ராமகிருஷ்ணன் 1986இல் கால்வினோவின் நாவல்களை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவர் கால்வினோவின் ஒரு சிறுகதையை ‘இனி’ இதழுக்காக மொழிபெயர்த்தார் என்று ஞாபகம். கால்வினோவின் இதர படைப்புகளைத் தேடித்தேடி படித்த நான் 2004 ஆம் வருடம் ஃபிரான்ஸின் தலைநகரான பாரிசிலிருந்து நண்பர்களுடன் இத்தாலியின் ஃப்ளாரன்சுக்கும், வெனிசுக்கும் சாலைவழியாக பயணம் செய்தபோதுதான் Invisible Cities ஐ வாசித்தேன். அதற்குள் நான் உலகத்தை இரண்டு முறை சுற்றி வந்துவிட்டபடியால் மார்கோ போலோ போன்றே என்னுள் ஒரு பயணியின் அகம் உருவாகியிருந்தது. கால்வினோவின் ஐம்பத்தைந்து வசனகவிதைகளால் ஆன அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் என் பயண அனுபவங்களை கற்பனையால் மேலும் மேலும் செழுமைப்படுத்திக்கொண்டே இருந்தது. நாட்டார் வழக்காறுகளின் தொகுதியாக பிறந்த ஐரோப்பிய நாவல் செர்வாண்டசில் நகை பொலிவு பெற்று கால்வினோவின் Invisible Citiesஇல் எங்கே வந்து சேர்ந்திருக்கிறது பார்த்தீர்களா என்று வாய்விட்டு கூவினேன்.  என்னுடன் பயணம் செய்த இரண்டு ஃப்ரெஞ்சுத் தோழிகளும் “எங்கே வந்து சேர்ந்திருக்கிறதா? வெனிஸுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. வெனிஸுக்கு உங்கள் வரவு நல்வரவாகுக” என்று பதிலளித்தார்கள்.

    ஃப்ளாரென்ஸையும், வெனிஸையும் பார்த்த தாந்தே (Dante) எப்படி நரகத்தை (inferno) கற்பனை செய்திருக்கமுடியும் என்று தாந்தேயைத் திட்டிக்கொண்டே வெனிஸை சுற்றிப்பார்த்தேன். படித்துக்கொண்டிருக்கும் Invisible Cities இல் ஒரு பத்தி பொருத்தமாய் இருந்தது : “The inferno of the living is not something that will be; if there is one, it is what is already here, the inferno where we live every day, that we form by being together. There are two ways to escape suffering it. The first is easy for many: accept the inferno and become such a part of it that you can no longer see it. The second is risky and demands constant vigilance and apprehension: seek and learn to recognize who and what, in the midst of inferno, are not inferno, then make them endure, give them space.”

    வெனிஸிலிருந்து ஊர்திரும்ப கிளம்பியபோது காதலியைப் பிரியும் காதலனைப்போல என் நெஞ்சு விம்மியது. வெனிஸின் படகு வீட்டிலிருந்து பார்த்த ஆகாயத்தை மீண்டும் நான் எப்போது பார்ப்பேன்? “Memory's images, once they are fixed in words, are erased," Polo said. "Perhaps I am afraid of losing Venice all at once, if I speak of it, or perhaps, speaking of other cities, I have already lost it, little by little.”
   
    ஊர்திரும்பியபோது சென்னை நகரம் புத்தம் புதியதாய் இருந்தது: “...the people who move through the streets are all strangers. At each encounter, they imagine a thousand things about one another; meetings which could take place between them, conversations, surprises, caresses, bites. But no one greets anyone; eyes lock for a second, then dart away, seeking other eyes, never stopping...something runs among them, an exchange of glances like lines that connect one figure with another and draw arrows, stars, triangles, until all combinations are used up in a moment, and other characters come on to the scene... ”

    பயணம் தரும் கனவிலிருந்து விழித்து சென்னையின் தினசரி வாழ்க்கையில் மூழ்கிக்கொண்டிருந்தேன். என் தோழிகளிடம் இருந்து ஒரு போஸ்ட்கார்ட் வந்தது: “ உனக்கு ஒன்று தெரியுமா Invisible Cities நாவலில் வரும் அத்தனை நகரங்களுமே வெனிஸ்தான். கோர் விடால் எழுதியிருக்கிறார்.”  என்றாவது ஒரு நாள் நானும் சென்னையின் கன்ணுக்குப் புலப்படாத நகரங்களைப் பற்றிய ஒரு நீள் கவிதையை புனைவேன் அதன் தலைப்பு ‘அனாதையின் காலம் ‘ என்பதாக இருக்கும்.

http://www.amazon.in/Invisible-Cities-Vintage-Classics-Calvino/dp/0099429837

    

No comments: