Thursday, April 16, 2015

ஃபேஸ்புக் முல்லா நஸ்ருதீன் கதைகள் | குட்டிக்கதை

ஃபேஸ்புக்கில் நான் எழுதிய சமீபத்திய  முல்லா நஸ்ருதீன் குட்டிக்கதைளை இந்தத்தளத்தில் பகிர்ந்துகொள்ளவில்லை என சில நண்பர்கள் வருத்தப்படுகிறார்கள். அவர்களுக்காக இங்கே மீள்பகிர்வு செய்கிறேன். என்னுடைய சிறு கதைகளில் மு என்று வந்த நபரே பின் நவீன யுகத்தில் முல்லா நஸ்ருதீனாக மாறிவிட்டான். வேறு சில குட்டிக்கதைகளில் அவன் ஜோ ப்ரயன்ஸ்கி என்ற பெயரில் உலவுகிறான். ஜோ ப்ரயன்ஸ்கி யாரென்று யாரும் என்னிடம் கேட்கவில்லை நானும் சொல்லவில்லை. எனவே அது ரகசியம் என்று அறிக.

----------------------------------------
1

என் பையன்களின் பள்ளி ஆண்டு விழாவுக்கு நேற்று போயிருந்தேன். அவர்களின் ஆசிரியை என்னிடம் கடிந்துகொண்டார். நீங்களே ஒரு புரஃபசர். நீங்கள் உங்கள் மகன்களுக்கு அறிவுரை சொல்வதே இல்லையா என்றார். நான் அவரிடம் முல்லா நஸ்ருதீன் கதை ஒன்றைச் சொன்னேன்.

முல்லா நஸ்ருதீன் தன் மகனுக்கு அறிவுரை சொன்னார்: மகனே, ஆல்கஹால் நல்லதுதான். ஆனால் அதற்கு ஒரு எல்லை இருக்கிறது. அதோ அந்த மூலையில் நான்கு பேர் உட்கார்ந்து இருக்கிறார்களே அவர்கள் எட்டு பேராக உன் கண்களுக்குத் தெரியும் போது நீ நிறுத்திவிட வேண்டும். மகன் சொன்னான்: அப்பா, அங்கே இரண்டு பேர்தான் இருக்கிறார்கள்.

-------------------------------------------
2

ஜோ ப்ரயன்ஸ்கி ஏரியில் படகில் சுற்றி வர விரும்பினான். படகுக்காரன் ஒரு சுற்றுக்கு இரண்டாயிரம் ரூபாய் கேட்டான். ஜோ ப்ரயன்ஸ்கி இரண்டாயிரம் ரூபாயா என்று வாய் பிளந்தான். பின்னே, யேசு நீரில் நடந்த ஏரியாயிற்றே இது என்றான் படகுக்காரன். அவர் ஏன் நீரில் நடந்தார் என்று இப்போதுதான் புரிகிறது என்றான் ஜோ ப்ரயன்ஸ்கி. படகுத் துறை காலிப் படகுகளால் நிரம்பியிருந்தது.


-----------------------------------------
3

முல்லா நஸ்ருதீன் மிருதங்கம் வாசிக்க கற்றுக்கொள்வதென்று முடிவு செய்தார். தினசரி தன் மிருதங்கத்தை எடுத்துக்கொண்டு ஊரெல்லையில் இருந்த புளியமரத்தின் அடியில் உட்கார்ந்து மிருதங்கத்தில் ஒரு தட்டு கூட தட்டாமல் உதட்டைப் பிதுக்குவது, கண்களை உருட்டுவது, கன்னங்களை உப்புவது, ரத்தம் கக்கி சாவதைப் போல நாக்கைத் தொங்கவிடுவது என்று பாவனைகள் மட்டும் செய்துவிட்டு திரும்பி வந்துவிடுவார். புளியமரக் கொப்பில் வசித்து வந்த சங்கீத வித்துவான் பேய் ஒன்றிற்கும், அதன் ஃபேஸ்புக் நண்பர்களுக்கும் முல்லா நஸ்ருதீனின் பாவனைகள் புரிபடவில்லை. வித்வான் பேய் தன் ஃபேஸ்புக் நண்பர்கள் புடை சூழ முல்லாவை அணுகி "நஸ்ருதீன், அந்த மிருதங்கத்தை வைத்து என்ன செய்கிறாய்?" என்று கேட்டது. "உங்களைப் போலவே நடிகர் திலகம் சிவாஜியிடம் கற்றுக்கொண்டு மிருதங்கசக்கரவர்த்தி ஆக முயற்சி செய்கிறேன்" என்றார் முல்லா.

---------------------------------------------
4

முல்லா நஸ்ருதீன் தன் விழிகளைத் தூக்கி தன் கழுதையைத் தொடுவதும் மீள்வதுமாய் இருந்தார். வழிப்போக்கன் ஒருவர் முல்லா நீங்கள் எந்தக் குட்டிக்கதையிலும் இப்படி செய்வதில்லையே இப்ப என்ன இப்படி என்று வினவினார். ஏம்ப்பா வெண்முரசின் எத்தனை அத்தியாயங்களில் எத்தனை கதாபாத்திரங்கள் விழிகளைத் தூக்குவதும் தொடுவதுமாய் இருக்கிறார்கள் அதையெல்லாம் கேட்க மாட்டீர்கள். ஒரே ஒரு கதையில் நான் விழிகளை கீழே போட முயற்சி செய்துகொண்டிருக்கிறேன், உடனே கேட்க வந்து விட்டீர்களே என்று முல்லா நஸ்ருதீன் சலித்துக்கொண்டார்.

------------------------------------------------
5

அதிபர் ஒபாமா தன்னுடைய lame duck presidency இன் போது என்னென்ன பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று முல்லா நஸ்ருதீன் கட்டுரை ஒன்று வனைந்துகொண்டிருந்தார். ஆம், குயவன் மட்பாண்டம் வனைவது போல கட்டுரையை வனைந்துகொண்டிருந்தார். இடையிடையே எழுந்து போய் கண்ணாடி முன் நின்று ‘நீ பெரிய அறிவாளிடா நஸ்ருதீன்’ என்று தன்னைத் தானே பாராட்டிக்கொண்டு திரும்ப வந்து வனைவார். நஸ்ருதீனின் மனைவிக்கு இது தாள முடியாமல் இருந்தது. “இந்த நினைப்புதானே பொழைப்ப கெடுக்குது; நீ என்ன பெரிய பொருளாதார நிபுணனா இல்லை ஒபாமாதான் எதையும் செயல்படுத்தும் நிலையில் இருக்கிறாரா உனக்கு எதுக்கு இந்த அறிவுரைக் கட்டுரை எழுதற வேலை எல்லாம்?” என்ற மனைவியிடம் நஸ்ருதீன் சொன்னார்: “ சமஸ் மட்டும் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் டெல்லியில் போய் தமிழக பட்ஜெட் பற்றி என்ன பேச வேண்டும் என்று அறிவுரைக் கட்டுரை எழுதவில்லையா?”

------------------------------------------------------
6

ஃபேஸ்புக் ஃபேக் ஐடி மிருதங்க சக்கரவர்த்தி 'ஜாஹிர் ஹுசைன் தபலா இவள்தானா' என்று சதா பாடிக்கொண்டு வெறுமனே கைகளைத் தட்டிக்கொண்டிருந்தார். அவரைச் சுற்றி ஒரு கூட்டம் 'show now show now' என லைக் போட்டுக்கொண்டிருந்தது. அந்த வழியே போன முல்லா நஸ்ருதீன் 'உனக்கு என்னப்பா பிரச்சினை என்று கேட்டார். ஃபேஸ்புக் ஃபேக் ஐடி மிருதங்க சக்கரவர்த்தி 'சார், இந்தப்பாட்டு என் வாயிலிருந்து வருவது நிற்கவே மாட்டேன்கிறது. என்னை என் சைக்கியாட்ரிஸ்ட் You are anal அப்டின்னு சொல்லிட்டார்' என்றார் அழுதபடியே. நஸ்ருதீன் அதற்கு 'இதற்கு எதற்கப்பா சைக்கியாட்ரிஸ்டிடம் போக வேண்டும்? You are an asshole என்றுதான் உலகத்துக்கே தெரியுமே' என்று சொல்லி ஆறுதலளித்தார்.

-------------------------------------------------------------
7

கேங்டோக்கில் பௌத்த துறவி சாரஹாவை மையமாகக் கொண்டிருக்கும் ஓவியங்கள் பலவற்றைப் பார்த்தேன். தாந்தரீக பௌத்தத்தின் 84 மகா சித்தர்களில் முதன்மையாகக் கருத்தப்படுகிற சாரஹா பௌத்தம் பேசுகின்ற theory of dependence ஐத் தாண்டிச் சென்று தியானத்தை மேற்கொள்ளும் முறைமையை கற்பித்தவர். அவர் மனிதமனம் எதையும் நீர் நீரை சந்திப்பதைப் போல தியானத்தின் வழி சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர். சார்பு உறவுகளின் வழியே நம் உணர்ச்சிகள் கட்டமைக்கப்படுகின்றன. சார்பு நிலை உறவுகளை மீறிச் செல்வதையே சாரஹா நீர் நீரைச் சந்திப்பது போல என விளக்குகிறார்.


சார்பு உறவுநிலை வழி உணர்ச்சிகள் உருவாவதை விளக்கும் முல்லா நஸ்ருதீனின் கதை ஒன்று உண்டு.
முல்லா நஸ்ருதீன் ஒரு நாள் சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தார். அவர் முகம் கடும் வேதனையில் இருந்தது. எந்த நேரமும் கதறி அழுதுவிடுவார் போல இருந்தார். பார்ப்பவர்கள் எல்லோரும் என்ன விஷயம் என்று விசாரித்தார்கள். முல்லா சொன்னார்: என்னுடைய ஷுக்கள் என் கால்களின் அளவை விட இரண்டு இலக்கம் குறைந்தவை. என் கால்களை நான் அவற்றுள் திணித்துக்கொண்டிருக்கிறேன். அதனால் கடும் வலியும் வேதனையும் உண்டாகிறது. எல்லோரும் நீ ஏனப்பா அளவான புது ஷூக்கள் வாங்கிக்கொள்ளக்கூடாது என்று கேட்டார்கள். அதற்கு முல்லா இந்த ஷூக்களை கழற்றிப் போடும் போது ஏற்படும் மகிழ்ச்சியும், விடுதலை உணர்வும் இருக்கிறதே அது அளவான ஷூக்கள் அணிந்தால் வருமா என்று கேட்டார்.

-------------------------------------------------------
8

டைம்ஸ் நவ் அர்னாப் கோஸ்வாமியின் தினசரி காட்டுக்கத்தலைக் கேட்டு பழகியிருந்த முல்லா நஸ்ருதீனின் காதுகளுக்கு அவருடைய கழுதை கத்துவது மிகவும் இனிமையாக இருந்தது. கழுதை கத்துவதைக் கேட்டு இன்புற்று "இன்று பதினோரு முறை", "இன்று பதினெட்டு முறை" என்று ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போடுவதை நஸ்ருதீன் வழக்கமாக்கிக்கொண்டார். நஸ்ருதீனின் ஃபேஸ்புக் பதிவுகளை கண்காணித்து, ஒற்றறியும் ஃபேஸ்புக்கின் போலி நபருக்கு என்ன ஏது என்று புரியவில்லை ஆனால் பொறாமையாக இருந்தது. நஸ்ருதீன் "இன்று 22 முறை" என்று பதிவிட்ட போது பொறுக்க முடியாமல் போலி ஃபேஸ்புக் நபர் இந்த புணர்ச்சிகளின் எண்ணிக்கையை யார் சரி பார்ப்பது என்று எழுதினார்; அதற்கு நஸ்ருதீனின் பதிவுகளுக்கு லைக் போடும் நபர்களில் சிலரும் லைக் போட்டிருந்தனர். நஸ்ருதீன் அவருக்கு காது மந்தம் போலிருக்கிறது அதனால்தான் தன் கழுதை கத்துவது கேட்கவில்லை என்று நினைத்து, " நீங்கள் வேண்டுமானால் குனிந்து நில்லுங்கள் நான் என் கழுதையை கூட்டி வந்து நிரூபிக்கிறேன்" என்று பதிலளித்தார்.

----------------------------------------------------- 


No comments: